இரண்டு ஆண்டுகளுக்கு முன் தாங்கள் பணிபுரிந்த துவாஸ் வியூ தீயணைப்பு நிலையத்தில் நிகழ்ந்த கேலி வதை சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த கடைசி இரண்டு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகளுக்கு நேற்று தலா 10 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு, 42 வயது திரு நஸான் முகம்மது நாஸி, 2018ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் தேதி இரவு தேசிய சேவையாளர் ஒருவர் மீது இதர படை வீரர்கள் நடத்திய கேலி வதை சம்பவத்தைத் தடுக்கத் தவறினார் என்ற குற்றம் கடந்த மாதம் நிரூபணமானது.
திரு நஸான் சம்பவம் நடந்தபோது துவாஸ் வியூ தீயணைப்பு நிலையத்தின் துணைத் தலைவராகப் பணியாற்றினார்.
அதே தீயணைப்பு நிலையத்தின் தலைவரான 40 வயது கென்னத் சோங் சீ பூனுக்கு அதே தண்டனை விதிக்கப்பட்டது.
திரு சோங் இவ்வாண்டு ஜூலையில் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
திரு நஸானின் வழக்கறிஞரான திரு சிங்க ரத்னம் தமது கட்சிக்காரர் விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக மேல் முறையீடு செய்ய விரும்புகிறார் என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
சம்பவம் நடந்த நாளன்று, முழு நேர தேசிய சேவையாளரான 22 வயது கார்ப்பரல் கொக் யுவன் சின்னை 12 மீட்டர் ஆழமான பயிற்சிக் கிணற்றுக்குள் இறங்க அவரது மேலதிகாரிகளும் சக வீரர்களும் வற்புறுத்தினர்.
அவர் மறுக்கவே, அவரது சகாக்களில் ஒருவரான 34 வயது முகம்மது நூர் ஃபத்வா மஹ்முத் அவரைக் கிணற்றுக்குள் தள்ளி விட்டார்.
அதற்காக, நூர் ஃபத்வா உட்பட இந்தப் பேரிடருக்குக் காரணமான மூவருக்கு இதற்கு முன் தண்டனை விதிக்கப்பட்டது.
நூர் ஃபத்வாவுக்கு ஒராண்டு, நான்கு வாரச் சிறை விதிக்கப்பட்டது.
நஸான், சோங் இருவர் மீது முன்னதாக தங்களது அதிகாரத்தின் கீழ் உள்ள படை வீரர்கள் குற்றம் இழைக்க உதவியாக இருந்தனர் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. பின்னர் அந்தக் குற்றச்சாட்டு திருத்தப்பட்டது.
கடந்த ஜூலையில் நீதிமன்றத்தில் அவர்கள் இருவரும் சம்பவம் நடந்தபோது அந்த இடத்தில் இல்லை என்றும் அவர்கள் அங்கு இருந்திருந்தால் அந்தப் பேரிடர் நடப்பதைத் தடுத்திருப்பார்கள் என்று தற்காப்பு வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதத்தை மூத்த மாவட்ட நீதிபதி ஓங் ஹியன் சுன் ஏற்றுக்கொண்டார்.
இருப்பினும், அவர்கள் இருவரும் தவறான செயல் நடக்காமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பிலிருந்து தவறிவிட்டனர் என்று நீதிபதி தமது தீர்ப்பில் கூறினார்.