உணவங்காடி நிலையங்கள், காப்பிக் கடைகள் போன்றவற்றில் பணிபுரிவோர், உணவு விநியோகிப்பாளர்கள் என சுமார் 980 பேருக்கு இவ்வார இறுதியில் கொவிட்-19 எச்சில்/சளி மாதிரியைக் கொண்டு பரிசோதனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மரின் டிரைவில் இருக்கும் புளோக் 75க்கு அருகில் உள்ள கூடம், மரின் டெர்ரேசில் உள்ள 50A புளோக்குக்கு முன்னால் இருக்கும் திறந்த வெளியிலும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என தேசிய சுற்றுப்புற வாரியம், சிங்கப்பூர் உணவு அமைப்பு, என்டர்பிரைஸ் சிங்கப்பூர் ஆகியவை தெரிவித்துள்ளன.
டாக்சி மற்றும் தனியார் வாடகை கார் ஓட்டுநர்கள், உணவு விநியோகிப்பாளர்கள், வெளிநாட்டு ஊழியர் விடுதிகளுக்கு சேவை வழங்கும் முக்கிய நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் ஆகியோருக்கு பிசிஆர் பரிசோதனைகள் ஒரு முறை செய்யப்படும் என கடந்த மாதம் 29ஆம் தேதி சுகாதார அமைச்சு அறிவித்ததன் அங்கமாக இந்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பொதுமக்களுடன் இந்தப் பிரிவினர் அதிக கலந்துறவாடல்களில் ஈடுபடுவதால் அவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. பொதுமக்களிடையே நோய்ப் பரவலைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள இந்தப் பரிசோதனைகள் உதவும் எனவும் அமைச்சு குறிப்பிட்டது.
இன்று நண்பகல் நிலவரப்படி, சிங்கப்பூரில் இதுவரை 57,543 பேருக்கு கொவிட்-19 உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று 11 சம்பவங்கள் பதிவாகின. மார்ச் 12ஆம் தேதிக்குப் பிறகு பதிவான ஆகக் குறைவான கிருமித்தொற்று எண்ணிக்கை இது.
பரிசோதனைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இந்தப் பிரிவினர் கொவிட்-19 பாதிப்புக்கு ஆளாகும் அபாயம் அதிகமாக இருப்பதற்கான ஆதாரம் ஏதும் இல்லாத நிலையில், விருப்பமுடையவர்களுக்கு மட்டுமே இந்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.
ஜூ சியாட், மரின் பரேட் பகுதிகளில் இருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட 7 காப்பிக் கடைகள், புளோக் 84 மரின் பரேட் சென்ட்ரல், புளோக் 50A மரின் டெர்ரேஸ், டன்மன் ஃபூட் சென்டர் உணவங்காடி நிலையம் மற்றும் சந்தைகளில் இருக்கும் உணவுக் கடைகளில் பணிபுரிவோருக்கு இவ்வார இறுதியில் பரிசோதனைகள் செய்யப்படும் என்றும் இது குறித்து இம்மாதம் 14ஆம் தேதியிலிருந்து அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டது.
டிலிவாரூ, ஃபூட்பாண்டா, கிராப்ஃபூட், மெக்டொனால்ட்ஸ் ஆகியவற்றில் உணவு விநியோகிப்பாளர்களாகப் பணியாற்றும் சிலர் பரிசோதனைக்கு ஏற்கெனவே முன்பதிவு செய்துள்ளனர்.
பரிசோதனைக்குச் செல்வோர் அடையாளத்துக்கான அட்டையைக் கொண்டு செல்லவேண்டும். 3 நாட்களுக்குள் பரிசோதனை முடிவுகள் தெரியும். கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர்களுடன் அதிகாரிகள் தொடர்புகொள்வர்.