இரு வாரங்களுக்கு ஒரு முறை அட்டவணைப்படுத்தப்பட்ட வழக்கமான கொவிட்-19 பரிசோதனைகளுக்கு (ஆர்ஆர்டி) இன்னும் 5,700 ஊழியர்கள் செல்லவில்லை என்றும் அவர்கள் பரிசோதனைக்குச் செல்லும் வேலைக்குத் திரும்ப இயலாது எனவும் மனிதவள அமைச்சு, கட்டட, கட்டுமான ஆணையம், சுகாதார மேம்பாட்டு வாரியம், பொருளியல் மேம்பாட்டு வாரியம் ஆகியவை இணைந்து நேற்று (செப்டம்பர் 18) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தன.
நேற்று கிருமித்தொற்று அறிவிக்கப்பட்டவர்களில் உள்ளூர் சமூகத்தில் பாதிக்கப்பட்ட 30 வயது சிங்கப்பூரர் ஒருவர்.
இந்தியாவிலிருந்து திரும்பிய வேலை அனுமதிச் சீட்டு கொண்ட பெண் ஒருவருக்கும் நேற்று கிருமித்தொற்று அறிவிக்கப்பட்டது. சிங்கப்பூருக்கு வந்த பிறகு தனிமைப்படுத்தப்பட்டவர் அவர்.
சுவா சூ காங் அவென்யூ 3ல் உள்ள சன்ஷைன் பிளாசாவில் அமைந்திருக்கும் ஜயன்ட் கடை, நீதிமன்றம் ஆகியவற்றுக்கு கிருமித்தொற்று கண்டவர்கள் சென்றதாக நேற்று சுகாதார அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.
நேற்று அறிவிக்கப்பட்ட கிருமித்தொற்றுச் சம்பவங்களில் 9 பேர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களாவர்.
உள்ளூர் சமூகத்தில் பதிவாகும் சராசரி தினசரி கிருமித்தொற்று எண்ணிக்கை கடந்த வாரத்தில் ஒன்றாகக் குறைந்துள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் அது 2 ஆக இருந்தது.
ஆனால், ஏற்கெனவே அறியப்பட்ட கிருமித்தொற்று குழுமங்களுடன் தொடர்பில்லாத புதிய சம்பவங்களின் தினசரி சராசரி, கடந்த 2 வாரங்களாக 1ஐ விட குறைந்து நிலையாக உள்ளது.
இதுவரை சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றால் 27 பேர் உயிரிழந்தனர்.
அனைத்துலக அளவில் 30.6 மில்லியனுக்கும் அதிகமானோர் கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர்; 955,000க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர்.