செங்கல்பட்டு: தெருவில் கழிவுநீர் தேங்கியிருந்ததால் பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை வீட்டார், பெண் வேண்டாம் என்று நிராகரித்துச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் சென்னை நன்மங்கலத்தில் நடந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், நன்மங்கலம் ஊராட்சிப் பகுதியில் உள்ள காந்தி, அண்ணா, பாரதி ஆகிய தெருக்களில் 500 குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
எனினும், இங்குள்ள தெருக்களில் பல ஆண்டுகளாகவே கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் எப்போதும் துர்நாற்றம் வீசுவதுடன் பார்க்கவே அசிங்கமாகவும் தெருக்கள் காட்சி அளிக்கின்றன.
இதற்கும் மேலாக மனதை நோகடிக்கும் சம்பவங்களும் இங்கு நடந்து வருவதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
அண்மையில் காந்தி தெருவில் வசிக்கும் பெண்ணை மாப்பிள்ளை வீட்டார் பார்க்க வந்துள்ளனர்.
அப்போது, தெருவில் தேங்கிக் கிடக்கும் கழிவுநீரைக் கடந்துதான் பெண்ணின் வீட்டிற்குள் செல்ல வேண்டிய நிலை இருந்துள்ளது.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாப்பிள்ளை வீட்டார், பெண்ணைப் பார்க்காமலேயே திரும்பிச் சென்றுவிட்டனர்.
இதுபோன்று பல சம்பவங்கள் தங்கள் பகுதியில் நடந்திருப்பதாகவும் பொதுமக்கள் குறிப்பிடுகின்றனர்.
அத்துடன், இந்தக் கழிவுநீரால் அங்குள்ள மக்கள் காலரா, டெங்கி உள்ளிட்ட நோய்த்தொற்றாலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் கொரோனா கிருமித் தொற்றும் சேர்ந்துகொண்டதால் மக்கள் படாதபாடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து, நன்மங்கலம் ஊராட்சி செயலாளரிடத்தில் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டி உள்ள பொதுமக்கள், தாங்களே தங்களால் முடிந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ள நான்கு தெருக்களையும் சுத்தப்படுத்தி வருகின்றனர்.