எச்ஐவி தொற்றிலிருந்து 2008ஆம் ஆண்டில் குணமடைந்த முதல் நபரான திரு திமத்தி ரே பிரௌன் இப்போது மோசமான புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார்.
“எச்ஐவியிலிருந்து விடுபட்ட பிறகு அவரது ரத்தத்தில் எச்ஐவி கிருமி இல்லை; தற்போது லூக்கீமியா எனப்படும் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்,” என்று இந்தத் தகவலை இணையத்தில் வெளியிட்ட ஆர்வலர் மார்க் கிங்கிடம் திரு பிரௌனின் இணை டிம் ஹொஃப்ஜென் தெரிவித்தார்.
கலிஃபோர்னியாவில் இருக்கும் தம் இல்லத்தில் திரு பிரௌனுக்கு அந்திமக்கால பராமரிப்பு வழங்கப்படுகிறது.
“இதற்கு மேல் முடியாது என்கிற நிலை வரும் வரை போராடுவேன்,” என்று 54 வயதான திரு பிரௌன் குறிப்பிட்டார்.
எச்ஐவி தொற்றிலிருந்து விடுபட்டு சரித்திரம் படைத்த அவர், அந்தக் கிருமியால் பாதிக்கப்பட்ட கோடானுகோடி மக்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக் அவிளங்கினார்.
பெர்லினில் படித்துக்கொண்டிருந்தபோது 1995ஆம் ஆண்டில் அவருக்கு எச்ஐவி தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 2006ஆம் ஆண்டில் அவருக்கு ரத்தப் புற்றுநோய் இருப்பதும் தெரியவந்தது.
அரிதான மரபணி திரிபு ஆற்றல் கொண்ட ஒருவரிடமிருந்து பெற்ற ஸ்டெம் செல்லை இவருக்குப் பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது. எச்ஐவி, ரத்தப்புற்று நோய் ஆகிய இரண்டிலிருந்தும் அவர் விடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
வலி மிகுந்த, அபாயகரமான சிகிச்சைகளுக்குப் பிறகு 2008ஆம் ஆண்டில் இவ்விரு பிரச்சினைகளிலுமிருந்து அவர் மீண்டதாக அறிவிக்கப்பட்டது.
ஈராண்டு அமைதிக்குப் பிறகு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதத்தில் பொது உரைகளை நிகழ்த்தினார் திரு பிரௌன். அறநிறுவனம் ஒன்றையும் தொடங்கினார்.
கடந்த ஆண்டு இரண்டாவது நபர் எச்ஐவி தொற்றிலிருந்து விடுபட்டதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவருக்கும் திரு பிரௌனுக்கு அளிக்கப்பட்டது போன்ற சிகிச்சை அளிக்கப்பட்டது.