ஏப்ரல் முதல் ஜூன் வரை வேலைகள் நடைபெறாதது காரணமாக இருக்கலாம்; ஆனாலும் 2020 முதல் பாதியில் 16 வேலையிட மரணங்கள்
சிங்கப்பூரில் கொவிட்-19 காரணமாக பல வேலை இடங்கள் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரை முடங்கிப் போய் இருந்தன. இதன் காரணமாக இந்த ஆண்டின் முதல் பாதியில் வேலை இட காயங்கள் ஏறக் குறைய கால்வாசி குறைந்திருக்கின்றன. பல விபத்துகளிலும் பாதகமான சம்பவங்களிலும் சிக்கி காயம் அடைந்தவர்கள் எண்ணிக்கை சென்ற ஆண்டின் முதல் பாதியில் 6,630 ஆக இருந்தது.
இது, இந்த ஆண்டில் ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாத காலத்தில் 4,996 ஆகக் குறைந்தது என்பது மனிதவள அமைச்சும் வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார மன்றமும் நேற்று வெளியிட்ட புள்ளிவிவரங்கள் மூலம் தெரிகிறது. இருந்தாலும் இந்த ஆண்டில் 16 வேலையிட மரணங்கள் நிகழ்ந்துள்ளன என்பதை அதிகாரிகள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
இந்த எண்ணிக்கை ஏறக்குறைய சென்ற ஆண்டின் முதல் அரையாண்டு எண்ணிக்கை (17) அளவுக்கு இருக்கிறது என்பது இதில் கவனிக்கத்தக்கது. 2019 முழுவதும் 22 வேலையிட மரண சம்பவங்கள் நிகழ்ந்தன. மேலிருந்து கீழே விழுந்துவிடுவது, வேலையிட வாகனங்கள் தொடர்பான விபத்துகளே மரணங்களுக்கு முக்கிய காரணங்களாக தொடர்ந்து இருந்து வருகின்றன.
ஊழியர்கள் இலேசாக, கடுமையாக காயம் அடைந்ததற்குத் தடுமாறி விழுந்தது, வழுக்கி விழுந்தது, மேலிருந்து விழுந்தது ஆகியவையே முக்கிய காரணங்கள். என்றாலும் இத்தகைய சம்பவங்கள் சென்ற ஆண்டின் முதல் பாதியைவிட (1,862) இந்த ஆண்டில் குறைந்தன (1,508).
இயந்திரங்களில் அடிபடுவது இரண்டாவது முக்கிய காரணம். இத்தகைய 809 சம்பவங்கள் இந்த ஆண்டில் நிகழ்ந்தன. இந்த ஆண்டின் முதல் பாதியில் போக்கு வரத்து மற்றும் பாதுகாப்புப் பெட்டகத் தொழில்துறையைச் சேர்ந்த வேலை இடங்களில்தான் ஆக அதிகமாக ஐந்து உயிர்ப் பலி விபத்துகள் நிகழ்ந்தன.
சென்ற ஆண்டின் முதல் பாதியில் 6 ஆக இருந்த கட்டுமானத் தொழில் துறை மரணங்கள் எண்ணிக்கை இந்த ஆண்டில் 3 ஆகக் குறைந்தன. இந்தத் துறையில் கடுமையாக காயம் ஏற்பட்ட சம்பவங்கள் 26. உற்பத்தித்துறையில் 3 மரணச் சம்பவங்கள் நிகழ்ந்தன. இந்தத் துறையில்தான் 40 கடுமையான, 971 இலேசான காயங்கள் ஏற்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்தன. தீ, பாரம் தூக்கி வாகனம் சம்பந்தப்பட்ட 4 மரணச் சம்பவங்கள் இடம்பெற்றன. வேலையிட நோய்களுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை கால்வாசி குறைந்து 264 ஆக இருந்தது.
இதனிடையே, வேலைகளைப் பாதுகாப்பு மிக்க ஏற்பாடுகளுடன் மறுபடியும் தொடங்க தோதாக தான் தொழில்துறைகளுடன் தொடர்பு கொண்டு வருவதாக இந்த மன்றம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் கடைசிக் காலாண்டு முதல் நிறுவனங்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரச் செயல்திறன் வெளியிடப்படும். பாதுகாப்பில் தவறும் குத்தகைதாரர்களுக்கு அரசாங்க குத்தகைகள் கிடைக்காது.
ஊழியர்களுக்கு மருத்துவ விடுப்பு அல்லது இலேசான வேலைகளைக் கொடுக்க காரணமாக இருக்கும் வேலை இட விபத்துகள் அனைத்தையும் பற்றி முதலாளிகள் செப்டம்பர் 1 முதல் தெரிவிக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.