மக்களுக்காக திட்டங்களை அறிவிக்கும்போது அவற்றுக்கு பல வளங்கள் தேவைப்படும். அதற்கு ஏதுவாக சிங்கப்பூரின் ஐந்து வட்டாரங்களின் மேயர்கள் பல்வேறு வழிகளிலிருந்து வளங்களைத் திரட்டி, தங்கள் வட்டாரத்துக்கு உட்பட்டிருக்கும் தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குகிறார்கள்.
மக்களின் தேவைகள் என்ன என்பதை அறிந்து, அதற்கான தீர்வுகளை உடனடியாக அறிவிக்கிறோம் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் ஐந்து வட்டார மேயர்களும் தெரிவித்தனர்.மத்திய சிங்கப்பூர் வட்டார மேயர் டெனிஸ் புவா, தென்மேற்கு வட்டார மேயர் லோ யென் லிங், வடகிழக்கு வட்டார மேயர் டெஸ்மண்ட் சூ ஆகியோர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தென்கிழக்கு வட்டார மேயர் ஃபாமி அலிமானும் வடமேற்கு வட்டார மேயர் அலெக்ஸ் யாமும் புதிதாக நியமிக்கப்பட்டவர்கள்.
“மேயர்களின் பணி பற்றியும் சமூக மேம்பாட்டு மன்றங்களின் (சிடிசி) பணி பற்றியும் மக்களிடையே பல கேள்விகள் எழு கின்றன.
“முதலில், குடியிருப்பாளர்களின் தேவைகளை மேயர்கள் கண்டறிகிறார்கள். பின்னர் பல வழிகளிலிருந்து வளங்களைத் திரட்டுவ துடன் பங்காளிகளாகத் திகழும் பெரிய நிறுவனங்கள், சமூக சேவை அமைப்புகள், இதர அமைப்புகள் ஆகியவற்றின் கட்டமைப்பைப் பயன்படுத்துகிறார்கள். அதன் பிறகு, மக்களின் தேவைகளுக்கேற்ப திட்டங்களை அமல்படுத்துகின்றனர்,” என்றார் திருவாட்டி டெனிஸ் புவா.
“அடித்தள மக்களுக்கு உள்ள தேவைகளை அறிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் எப்படிப்பட்ட வளங்களைத் திரட்டலாம் என்ற பரந்த கண்ணோட்டத்தைப் பெற முடியும்.
“உதாரணத்துக்கு, பகுதிநேர வேலைகளைச் செய்துகொண்டிருந்த உயர்கல்வி மாணவர்களுக்கு கொவிட்-19 காலத்தில் வேலை இல்லாமல் போய்விட்டது. இந்தத் தேவைகளை அறிந்து உடனடியாக தீர்வு நடவடிக்கைகளை அறிவித்தோம். பிரச்சினைகளை அறிந்து, அதை மதிப்பீடு செய்து, எவ்வளவு தொகை தேவைப்படும் என்பதைக் கணக்கிட்டு, பின்னர் திட்டத்தை அமல்படுத்த குறைந்தது ஆறு வாரங்கள் பிடித்தன,” என்றார் இரண்டாம் முறையாக மேயராகப் பொறுப்பேற்றிருக்கும் திரு டெஸ்மண்ட் சூ.
வடகிழக்கு சமூக மேம்பாட்டு மன்றத்தின் உயர்கல்வி மாணவர்களுக்கான போக்குவரத்து உதவித் திட்டத்துக்குத் தகுதி பெறுவோருக்கு $150 முதல் $300 வரை கிடைக்கும்.
சமூக மேம்பாட்டு மன்றங்கள் 1997ஆம் ஆண்டில் முதலில் தொடங்கப்பட்டபோது, அவை சமூக மற்றும் வேலை வாய்ப்பு உதவிகளை மட்டுமே செய்து வந்தன என்றார் திருவாட்டி லோ.
“பின்னர் இந்தப் பணிகள் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு மற்றும் சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பு (இது முன்னர் சிங்கப்பூர் ஊழியரணி மேம்பாட்டு அமைப்பு என்று அழைக்கப்பட்டது).
“சமூக மேம்பாட்டு மன்றங்களின் சில அம்சங்கள் இன்னும் மாறாமல் உள்ளன. சார்ஸ், உலக பொருளியல் நெருக்கடி போன்ற நெருக்கடி காலத்தில் உடனடியாக உதவி நடவடிக்கைகளை அறிவித்தல், உள்ளூர் மக்களிடமிருந்து ஆதரவு திரட்டுதல் போன்றவை இன்னும் மாறாமல் இருக்கின்றன.
“மேலும், பல கலாசார, பல இன சிங்கப்பூரில் சமூக பிணைப்பை வலுப்படுத்துதல், தங்கள் வட்டாரத்தில் பாதிப்புக்குள்ளாகும் குடும்பங்களுக்கு சமூக திட்டங்களை அறிவித்தல் ஆகியவற்றிலும் மாற்றமில்லை என்று திருவாட்டி லோ. விவரித்தார்.
“தேவை ஏற்பட்டால், சமூக மேம்பாட்டு மன்றங்கள் ஒவ்வொன்றும் தனது சொந்த திட்டங்களை நடைமுறைப்படுத்தும். சிடிசி பற்றுச்சீட்டு திட்டம், கொவிட்-19 காலத்தில் மாணவர்களுக்கான உணவுத் திட்டம் போன்ற தேசிய அளவிலான திட்டங்கள் அமலாகும்போது ஐந்து மன்றங்களும் ஒன்று சேர்ந்து பணியாற்றும்.
“தங்களுக்கு உள்ள நீக்குப்போக்கான செயல்முறையால், அரசாங்கம் வழங்கும் தேசிய அளவிலான உதவித் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதற்கு முன்னதாகவே சிடிசி மன்றங்கள் உதவி நடவடிக்கைகளை அமல்படுத்த முடிகிறது. இருப்பினும், மக்களின் வரிப்பணம் இதில் அடங்கியிருப்பதால் திட்டங்கள் கவனமாகச் செயல்படுத்தப்படுகின்றன என்று விளக்கினார் மேயர் குழுவுக்குத் தலைமையேற்கும் திருவாட்டி லோ.
“நாடாளுமன்ற உறுப்பினர்கள், அடித்தள ஆலோசகர்கள், அமைச்சுகள், இதர உதவிக் குழுக்கள் ஆகியவற்றுக்கு மாற்றாக மேயர்களும் சமூக மேம்பாட்டு மன்றங்களும் செயல்படுவதில்லை.
“மாறாக, அவற்றின் திட்டங்களுக்கு திரைக்குப் பின்னால் இருந்து ஆதரவு மற்றும் இணைப்புக் கரத்தை சமூக மேம்பாட்டு மன்றங்கள் நீட்டுகின்றன,” என்றார் திருவாட்டி புவா.
“நான் முதல் முதலில் சமூக மேம்பாட்டு மன்றத்தில் நுழைந்தபோது, எனது தொகுதியின் பங்குதாரர்களுடன் எவ்வாறு தொடர்பை ஏற்படுத்திக்கொள்வது என்று நினைத்தேன். ஆனால் இங்கு அதற்குரிய அனைத்து தகவல்களும் உள்ளன. அவர்கள் பங்குதாரர்கள், பெருநிறுவனப் பங்காளிகள், பள்ளிகள், சேவை அமைப்புகள் என்று அனைவருடனும் வலுவான பிணைப்பைக் கொண்டுள்ளனர்,” என்றார் முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு பெற்றிருக்கும் திரு ஃபாமி.
“சமூக மேம்பாட்டு மன்றங்கள் திட்டங்களைச் செயல்படுத்துவதில் சிறந்து விளங்குகின்றன. அடித்தள மக்களுக்கு வளங்களை அளித்து உதவுதல், பங்காளித்துவ அமைப்பு களுடன் கொண்டுள்ள வலுவான பிணைப்பைக் கட்டிக்காத்தல் போன்றவை அவற்றில் அடங்கும்.
“சமூக மேம்பாட்டு மன்றங்களின் உதவித் திட்டங்கள் யாவை என்று மக்கள் அறிந்திராத நிலை ஏற்படக்கூடாது என்பதில் நாங்கள் கவனமாக செயல்படுகிறோம்,” என்றார் திரு யாம்.