கட்டுமானத் துறை மேலும் ஒருங்கிணைந்ததாகவும் மீள்திறன் பெற்றதாகவும் இருந்தால் கொவிட்-19 கொள்ளைநோய் போன்ற எதிர்பாராத நிகழ்வுகளை எதிர்காலத்தில் சந்திக்க தயார் நிலையில் இருக்க முடியும் என்றார் தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ.
முன்னதாக பிரதமர் லீ சியன் லூங் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்த ‘டிசீஸ் எக்ஸ்’ என்ற பயங்கரமான தொற்று நோயும் இதில் அடங்கும் என்றார் அமைச்சர்.
அதிநவீனக் கட்டுமானத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது, மின்னிலக்கமயமாவதை ஊக்குவிப்பது, கட்டுமானப் பொருட்களின் கொள்முதல் மற்றும் நிர்வாகத்தில் அணுகுமுறையை ஆராய்வது போன்றவற்றின் வழி துறை கூடுதல் ஒருங்கிணைப்பும் மீள்திறனும் பெறலாம் என்றார் அவர்.
“நம் உற்பத்தித்திறனை மேம்படுத்த இது உதவும். அத்துடன் நம் நகரை மேலும் ஆக்கபூர்வமாக, நீடித்த நிலைத்தன்மையுடையதாக உருவாக்கிப் பராமரிக்க முடியும்,” என்று நேற்று நடைபெற்ற மெய்நிகர் இலையுதிர் காலக் கொண்டாட்ட நிகழ்வில் திரு லீ கூறினார்.
சிங்கப்பூர் சொத்துச் சந்தை மேம்பாட்டாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் சொத்துச் சந்தை தொழில்துறை சார்ந்த முக்கிய நபர்கள் கலந்துகொண்டனர்.
இத்தொழில்துறையின் உருமாற்றத்திற்கு சொத்துச் சந்தை மேம்பாட்டாளர்களின் பங்கு இன்றியமையாதது என்று சுட்டினார் திரு லீ.
ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க முயற்சிகளைத் தொடர்வதுடன் புதிய நடைமுறைகள், தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்புகளைச் சொத்துச் சந்தை மேம்பாட்டாளர்கள் தொடர வேண்டும் என்று தாம் எதிர்பார்ப்பதாக அமைச்சர் லீ தெரிவித்தார்.
கொவிட்-19 கொள்ளை நோயால் பெரிதும் பாதிக்கப்பட்ட துறைகளில் கட்டுமானத் துறையும் ஒன்று. முதல் காலாண்டிலிருந்து இரண்டாவது காலாண்டில் கட்டுமானத் துறை 97.1% சுருங்கியது.
துறைக்கு ஏற்பட்டுள்ள தாக்கத்தைக் குறைக்க அரசாங்கம் $1.36 பில்லியன் மதிப்பிலான கட்டுமான ஆதரவுத் தொகுப்புத் திட்டத்தை அறிவித்தது.
சொத்துச் சந்தை மேம்பாட்டாளர்களுக்கும் ஒரு சில கட்டுமான நிபந்தனைகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
“நிபந்தனைகள் தொடர்பில் நிவாரணம் அளிப்பதன் மூலம் நம் குத்தகையாளர்களுக்கு ஆதரவு அளிப்பதில் மேம்பாட்டாளர்கள் கவனம் செலுத்துவர் என்றும் கட்டுமானத் திட்டங்களில் ஏற்படும் தாமதம் குறையும் என்றும் நம்புகிறோம்,” என்றார் திரு லீ.
கொவிட்-19 தந்துள்ள பாரத்தில் தேவையற்ற பங்கைக் கட்டுமானத் துறையில் யாவரும் தாங்கிக்கொள்ளும் நிலை வரக்கூடாது என்பதையும் தாங்கள் விரும்புவதாக அவர் தெரிவித்தார்.
சவால்மிக்க சூழலில் தாக்குப்பிடிக்க தற்காலிக நிவாரண நடவடிக்கைகள் உதவுவதாக சங்கத்தின் தலைவர் சியா கியாங் ஹோங் கூறினார்.