மத்திய அரசு நிறைவேற்றி உள்ள வேளாண் சட்டங்களுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
இந்தச் சட்டங்கள் விவசாயிகளுக்கு மரண தண்டனை போன்றது என ராகுல் காந்தி தமது டுவிட்டர் பதிவில் விமர்சித்துள்ளார்.
நாட்டிலுள்ள விவசாயிகளின் குரல் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் நசுக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் ஜனநாயகம் செத்துவிட்டது என்று குறிப்பிட்டு, மாநிலங்களவையில் வேளாண் சட்டங்களை நிறைவேற்றியபோது வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கைகள் குறித்து நாளேடுகளில் வெளியான செய்தியை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை நிராகரிக்கும் வகையில் மாநில சட்டப்பேரவைகள் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களை சோனியா காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை நிராகரிக்கும் உரிமை மாநிலங்களுக்கு உண்டு என காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
இதுகுறித்து அவை விரைவில் அறிவிக்க உள்ளன. காங்கிரஸ் தலைமையில் போராட்டம் நடக்கும் எனத் தெரிகிறது.