இந்தியாவில் இதுவரை 6.23 மில்லியன் பேரை கொவிட்-19 தொற்றி இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அதைப்போல பத்து மடங்கு பேருக்கு, அதாவது 60 மில்லியனுக்கு மேற்பட்டோரை அந்நோய் தொற்றி இருக்கலாம் என இந்திய மருத்துவ ஆய்வுக் கழகத்தின் ஆய்வு முடிவு கூறுகிறது.
மக்கள்தொகையில் எவ்வளவு விகிதத்தினர் கிருமித்தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்பதை அறியும் விதமாக, இரத்தத்தில் குறிப்பிட்ட நோயெதிர்ப்புப் பொருள்கள் எவ்வளவு உள்ளன என்பதைக் கண்டறியும் ஆய்வு நாடு முழுதும் நடத்தப்பட்டது.
“பத்து வயதுக்கு மேற்பட்ட 15 பேரில் ஒருவரை கொரோனா கிருமி தொற்றியிருக்கலாம் என்பது ஆய்வின் மூலம் பெறப்பட்ட முக்கிய முடிவுகளில் ஒன்று,” என்றார் இந்திய மருத்துவ ஆய்வுக் கழகத்தின் தலைமை இயக்குநர் பல்ராம் பார்கவா.
அத்துடன், கிராமப்பகுதிகளைக் காட்டிலும் நகர்ப்புறங்களில்தான் கிருமித்தொற்று அதிகமாக இருந்திருப்பதும் தெரியவந்துள்ளது.
ஆய்வில் பங்கேற்ற கிராமவாசிகளில் 4.4 விழுக்காட்டினரின் இரத்தத்தில் அந்தக் குறிப்பிட்ட நோய் எதிர்ப்புப் பொருள்கள் இருந்தன. நகர்ப்புறங்களைப் பொறுத்தமட்டில், அவ்விகிதம் சேரிப்பகுதிகளில் 15.6 விழுக்காடாகவும் மற்ற பகுதிகளில் 8.2 விழுக்காடாகவும் இருந்தது.
கடந்த ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் இருந்து சென்ற மாத நடுப்பகுதி வரை 21 மாநிலங்களைச் சேர்ந்த 29,000க்கு மேற்பட்ட வர்களிடம் மேற்கொள்ளப்பட்ட இரத்தப் பரிசோதனைகளின் அடிப்படையில் இந்த முடிவுகள் எட்டப்பட்டன.
முதன்முதலில் நடத்தப்பட்ட இத்தகைய நோயெதிர்ப்புப் பொருள் ஆய்வின்மூலம், கடந்த மே மாத வாக்கில் பெரியவர்களில் 0.73 விழுக்காட்டினரைக் கிருமி தொற்றி இருந்திருக்கலாம் எனக் கணிக்கப்பட்டது.
புதுடெல்லி, மும்பை ஆகிய பெருநகரங்களில் நடத்தப்பட்ட வேறு சில ஆய்வுகளின் முடிவுகளும், அதிகாரபூர்வ எண்ணிக்கையைக் காட்டிலும் கொரோனா பாதிப்பு அதிகளவில் இருந்திருக்கலாம் என்பதையே காட்டுகின்றன.
இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்று காரணமாக 97,497 பேர் மாண்டுவிட்டனர். இன்னும் இரு நாள்களில் மரண எண்ணிக்கை நூறாயிரத்தைத் தாண்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.