சிஙகப்பூரில் டெங்கிச் சம்பவங்கள் தொடர்ந்து ஏழாவது வாரமாகக் குறைந்து வந்தபோதிலும் கொசுக்களின் பெருக்கம் இன்னும் கட்டுக்கடங்கவில்லை என தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் தொடர்ந்து விழிப்புடன் இருக்குமாறு அது வேண்டுகோள் விடுத்துள்ளது.
கடந்த வாரம் 593 டெங்கிச் சம்பவங்கள் பாதிவாயின. அது அதற்கு முந்திய வாரத்தைக் காட்டிலும் சுமார் 11 விழுக்காடு குறைவு. மேலும், ஏழு வாரங்களுக்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் 56 விழுக்காடு சரிவு அந்த விகிதம்.
நிலைமை மேம்பட்டிருந்தாலும் கடந்த மூன்று வாரங்களாக குடியிருப்பு வட்டரங்களில் கொசுக்கள் எண்ணிக்கை 12 விழுக்காடு அதிகரித்து உள்ளதாக வாரியம் குறிப்பிட்டு உள்ளது.
“வாராந்திர டெங்கிச் சம்பவங்களின் எண்ணிக்கை குறைவாகி வந்தாலும் ஒட்டுமொத்த சம்பவங்களின் எண்ணிக்கை அதிகம். மேலும் ஏடிஸ் கொசுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் டெங்கிச் சம்பவங்கள் இனிஒருமுறை ஏற்றம் காணும் வாய்ப்புகள் அதிகம்,” என்றது வாரியம்.
ஆண்டுதோறும் மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை டெங்கிப் பருவம் உச்சத்தில் இருக்கும் என்பதால் இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது.
இவ்வாரம் செவ்வாய்க்கிழமை வரை 195 டெங்கிக் குழுமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. முந்திய வாரத்தைக் காட்டிலும் இது 11 குறைவு. இவ்வாண்டில் 2,543 டெங்கிக் குழுமங்கள் கண்டறியப்பட்டு அவற்றில் 2,348 குழுமங்கள், அதாவது 92 விழுக்காடு மூடப்பட்டுவிட்டன. இருப்பினும் அருணாசலம் செட்டி ரோடு, கிம் யாம் ரோடு, அல்ஜுனிட் ரோடு, கேலாங் ரோடு, குலிமார்ட் ரோடு, அங் மோ கியோ அவென்யூ 2, ஈஸ்ட் கோஸ்ட் ரோடு, ஜாலான் பைடுரி, பிடோக் நார்த் அவென்யூ 1 ஆகிய வட்டாரங்களில் பெரிய டெங்கிக் குழுமங்கள் உண்டு.