இணையத்தில் சூழ்ச்சி செய்து ஒருவரின் ரகசிய தகவல்களைப் பெற முயலும் மோசடி பேர்வழிகள் புதிய பாணி தில்லுமுல்லுகளில் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்று போலிஸ் எச்சரித்து இருக்கிறது.
வங்கிகளின் விளம்பரங்களைப் போல போலி விளம்பரங்கள், போலி அதிர்ஷ்ட குலுக்கல்கள் மூலம் அவர்கள் மக்களை ஏமாற்ற முயல்கிறார்கள் என்று போலிஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
வாட்ஸ்அப்பில் வரும் அத்தகைய செய்திகள், ஃபேஸ்புக்கில் வரும் விளம்பரங்களைக் கண்டு ஏமாந்துவிட வேண்டாம்.
அத்தகைய தகவல்களுக்குச் செவிசாய்த்து ரகசிய தகவல்களைக் கொடுத்துவிட வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ள போலிஸ், வங்கிக் கணக்கில் ஏதேனும் தில்லுமுல்லு இடம்பெற்றிருப்பதாகச் சந்தேகம் கிளம்பினால் அது பற்றி உடனடியாகத் தெரிவிக்கும்படி மக்களைக் கேட்டுக்கொண்டது.
இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை இத்தகைய மோசடிகள் தொடர்பாக 898 புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இது 2019ஐவிட பல மடங்கு அதிகம். 2020 முதல் பாதியில் மொத்தம் $3.6 மில்லியன் பறிபோனது.