பாரிஸ்: பிரான்சில் இளையர் ஒருவரால் தலை துண்டிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஆசிரியருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பல்லாயிரக்கணக்கானோர் பேரணிகளை நடத்தியுள்ளனர்.
ஆசிரியர்களுக்கு ஆதரவாக பாரிஸ் உட்பட நாட்டின் பல நகரங்களிலும் திரண்ட பிரெஞ்சு மக்கள், இறந்தவருக்கு மௌன அஞ்சலி செலுத்தினர்.
முகக்கவசம் அணிந்து பேரணியில் ஈடுபட்டவர்களில் பலர் நாட்டின் சுதந்திரம், சமத்துவம், ஒற்றுமையைத் தற்காப்பதாகக் கூறினர்.
அண்மையில் பிரான்சை உலுக்கிய இந்த கொலைச் சம்பவத்தைக் கண்டித்து நடத்தப்பட்ட மாபெரும் பேரணியில் பிரெஞ்சுப் பிரதமர் ஜீன் ஹஸ்டெக்ஸ், கல்வி அமைச்சர் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் பங்கேற்று தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.
வரலாற்று, புவியியல் ஆசிரியர் சாமுவேல் பெட்டி என்பவர், பேச்சு சுதந்திரம் பற்றிய வகுப்பு ஒன்றில் மாணவர்களிடம் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரத்தைக் காட்டியதைத் தொடர்ந்து முஸ்லிம் மாணவர்களின் பெற்றோர் சிலர் கோபமடைந்ததாகச் சொல்லப்படுகிறது.
இதையடுத்து 18 வயது இளையர் ஒருவர், பள்ளிக்கு அருகில் அந்த 47 வயது ஆசிரியரின் தலையைக் கத்தியால் வெட்டினார்.
ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் பிறந்த, செச்னியைப் பூர்வீகமாகக் கொண்ட அந்த இளையர், சம்பவத்திற்குப் பின்னர் காவல்துறை அதிகாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தக் கொலைச் சம்பவத்தின் தொடர்பில் 11 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்திற்கு முன், ஆசிரியர் பெட்டிக்கு எதிராக சமூக ஊடகங்களில் மிரட்டல்கள் எழுந்து இருந்தன.
ஆசிரியர்களை மிரட்டல்களில் இருந்து பாதுகாப்பதற்கான உத்தியை பிரெஞ்சு அராசங்கம் ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெளிநாட்டவர் சுமார் 231 பேரை நாட்டைவிட்டு வெளியேற்ற பிரெஞ்சு அராசங்கம் திட்டமிட்டு வருகிறது. தீவிரவாத சமய நம்பிக்கை கொண்டவர்கள் என்று சந்தேகிக்கப்படும் அவர்கள், பிரெஞ்சு அரசாங்கத்தின் கண்காணிப்பு வளையத்தில் இருப்பவர்கள்.