சிங்கப்பூருக்குள் போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக கோபி ஆதவன் என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மேல்முறையீடு செய்யப்பட்டதை அடுத்து தண்டனை குறைக்கப்பட்டு கோபிக்கு சிறைத் தண்டனையும் பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
இதன் தொடர்பில் கோபியின் வழக்கறிஞர் எம்.ரவி ‘தி ஆன்லைன் சிட்டிசன்’ செய்தித் தளத்திற்கு அளித்திருந்த காணொளிப் பேட்டியில் பேசியிருந்தார். அதில் அவர் கூறிய கருத்துகளை மீட்டுக்கொண்டு, மன்னிப்பு கோருமாறு அரசாங்கத் தலைமைச் சட்ட அலுவலகம் (ஏஜிசி) திரு ரவிக்கு உரிமைக்கோரிக்கை கடிதம் அளித்துள்ளது. கோபி மீதுள்ள குற்றச்சாட்டை நிரூபணமாக்க வேண்டும் என்பதில் அரசு வழக்கறிஞர் குறியாக இருந்தார் என்றும் அதுவே மரண தண்டனை விதிக்கப்பட்டதற்கு இட்டுச் சென்றது என்றும் திரு ரவி பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் அரசாங்க வழக்கறிஞர் உட்பட சிலர் கோபியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
ஆதாரமில்லாமல் இக்கடுமையான குற்றச்சாட்டுகளை திரு ரவி கூறுகிறார் என்று தெரிவித்த ஏஜிசி, இதன் தொடர்பில் திரு ரவி பதிலளிக்க நாளை வரை அவகாசமும் கொடுத்துள்ளது.