வரும் டிசம்பர் இறுதிக்குள் சிங்கப்பூரில் உள்ள எல்லா பொதுக் கூடங்களிலும் டிரேஸ்டுகெதர் கருவி அல்லது டிரேஸ்டுகெதர் கைபேசிச் செயலி கட்டாயமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேலை இடங்கள், பள்ளிக்கூடங்கள், கடைத்தொகுதிகள், உணவகங்கள் போன்றவற்றுக்கு இவற்றில் ஏதாவது ஒன்று அவசியமாகும்.
டிரேஸ்டுகெதர் அடிப்படையிலான சேஃப் என்ட்ரி பதிவை அனுமதிக்கும் புதிய முறை இம்மாதம் முதல் கட்டம் கட்டமாக விரிவுபடுத்தப்படும் என கொவிட்-19 தொற்றுக்கு எதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழு தெரிவித்துள்ளது.
இந்த புதிய அம்சங்களைப் பற்றிய சிறு குறிப்புகள் இங்கு அளிக்கப்படுகின்றன. தற்போது ‘க்யூஆர்’ குறியீட்டை கைபேசி கேமரா மூலமோ சிங்பாஸ் செயலி மூலமோ ‘ஸ்கேன்’ செய்து சேஃப் என்ட்ரி பதிவை மேற்கொள்கிறோம். திறன் கைபேசி இல்லாதவர்கள் தங்களது அடையாள அட்டையில் உள்ள ‘பார்கோட்’ மூலம் சேஃப் என்ட்ரிக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். டிரேஸ்டுகெதர் அடிப்படையிலான சேஃப் என்ட்ரி பதிவு முறை அறிமுகம் கண்ட பின்னர் இவை எதுவும் தேவைப்படாது.
அடுத்ததாக, டிரேஸ்டுகெதர் செயலியில் சேஃப்என்ட்ரி க்யூஆர் குறியீட்டை ‘ஸ்கேன்’ செய்வதற்கான வசதி உள்ளீடு செய்யப்பட்டு இருக்கும். அதனையே இனி பயன்படுத்த வேண்டும்.மாறாக, டிரேஸ்டுகெதர் கருவியில் உள்ள க்யூஆர் குறீயீட்டையும் பொதுக் கூடங்களுக்குள் நுழைய ஸ்கேன் செய்யலாம்.
தற்போது சேஃப்என்ட்ரி பதிவு முறை நடப்பில் உள்ள எல்லா பொது இடங்களிலும் டிரேஸ்டுகெதர் அடிப்படையிலான சேஃப் என்ட்ரி முறை அறிமுகம் செய்யப்படும்.
டிரேஸ்டுகெதர் அடிப்படையிலான சேஃப்என்ட்ரி எப்போது முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பது பற்றியும் தெரிந்துகொள்ளலாம். அதிகப்படியான பொதுமக்கள் ஈடுபடும் நடவடிக்கைகள் நிகழும் கூடங்களில் இப்போது முதல் நவம்பர் நடுப்பகுதி வரை அறிமுகம் செய்யப்படும். திரை அரங்குகளில் வரும் திங்கட்கிழமை (அக்டோபர் 26) முதல் அது தொடங்கும்.
நூறு பேருக்கு மேல் பங்கேற்கும் வழிபாட்டுச் சேவைகள் போன்றவை நிகழும் இடங்களுக்கும் இது விரிவுபடுத்தப்படும். தொடர்ந்து, நாடளாவிய கூடங்கள் அனைத்திலும் டிசம்பர் இறுதிக்குள் டிரேஸ்டுகெதர் அடிப்படையிலான சேஃப்என்ட்ரி முறை அறிமுகம் செய்யப்பட்டுவிடும்.
டிரேஸ்டுகெதர் கருவி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
தற்போதைய நிலவரப்படி, 38 சமூக நிலையங்களில் அல்லது வெவ்வேறு கடைத்தொகுதிகளில் அமைக்கப்பட்டு உள்ள 13 நடமாடும் கூடங்களில் இவற்றைப் பெற்றுக்கொள்ளலாம். வசிக்கும் பகுதியில் உள்ள இடங்களில்தான் இவற்றைப் பெறவேண்டும் என்பதில்லை. கருவி வழங்கப்படும் இடங்களைப் பற்றிய முழுவிவரத்தை TokenGoWhere இணையப் பக்கத்தில் காணலாம்.
நவம்பர் மாத இறுதிக்குள் தீவில் உள்ள எல்லா 108 சமூக நிலையங்களிலும் இக்கருவி கிடைக்கும்.
சிங்கப்பூரில் வசிக்கும் ஏழு வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் அனைவரும் டிரேஸ்டுகெதர் கருவி அல்லது செயலியைப் பயன்படுத்துவது அவசியம்.