சிங்கப்பூரில் உள்ள தொழிற்பேட்டைகளில் 2030ஆம் ஆண்டுக்குள் கூடுதல் மரங்கள் நடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இருப்பதைவிட அவ்விடங்களில் உள்ள மரங்களின் எண்ணிக்கை மும்மடங்கு அதிகரிக்கப்படும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ நேற்று தெரிவித்தார்.
நாடெங்கும் நடைமுறைப்படுத்தப்படும் பசுமைத் திட்டத்தின்கீழ் இது செயல்படுத்தப்படும்.
சிங்கப்பூரில் உள்ள தொழிற்பேட்டைகளில் தற்போது 90,000 மரங்கள் இருப்பதாகவும் அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் அங்குள்ள மரங்களின் எண்ணிக்கை 260,00ஆக அதிகரிக்கப்படும் என்றும் திரு லீ தெரிவித்தார்.
“சாலையோரங்களில் மரங்கள் நடப்படும். வனப்பகுதியில் இருப்பதைப் போன்ற உணர்வை அவை ஏற்படுத்தும். தீவிரமாக மேற்கொள்ளப்பட இருக்கும் இந்தப் பசுமைத் திட்டம் அந்த இடங்களுக்கு அழகு சேர்க்கும். அதுமட்டுமல்லாது, சுட்டெரிக்கும் வெயிலிலிருந்து அந்த மரங்கள் நிழல் தரும்,” என்றார் அமைச்சர் லீ.
சமூக ஆதரவுடன் அடுத்த பத்து ஆண்டுகளில் சிங்கப்பூர் எங்கும் ஒரு மில்லியன் மரங்களை நடும் இலக்கை நோக்கி விரைகிறது
சிங்கப்பூர்.
சிங்கப்பூரில் மிகவும் வெப்பமான பகுதிகளில் தொழிற்பேட்டைகளும் அடங்கும். எனவே, அந்த இடங்களில் கூடுதலாக 100,000 மரங்களை நடப்போவதாக கடந்த மார்ச் மாதத்தில் அரசாங்கம் அறிவித்தது. அந்த எண்ணிக்கை தற்போது 170,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மரங்கள் நடப்படுவதுடன் சுற்றுப்புற உணர்கருவிகள் பொருத்தப்படும். வெப்பநிலை, ஈரப்பதம், காற்றின் வேகம் ஆகியவை தொடர்பாக தரவுகள் சேகரிக்கப்படும்.
தொடர்ந்து நடைபெற்று வரும் ஆய்வுத் திட்டங்களை இந்தத் தரவுகள் ஆதரிக்கும்.
நாட்டை வெயிலிலிருந்து பாதுகாத்து குளர்ச்சியான சுற்றுப்புறத்தை உருவாக்க இந்தத் தரவுகள் உதவும்.
இயற்கை எழில்மிகு இடங்களுடன் இந்த தொழிற்பேட்டைகள் இணைக்கப்பட்டு தொடர்ச்சியான பசுமைக் கட்டமைப்பு உருவாக்கப்படும் என்று அமைச்சர் லீ தெரிவித்தார்.
உதாரணத்துக்கு, சுங்கை புலோ இயற்கைப் பூங்காவுடனும் ரயில் பசுமைப் பாதையுடனும் சுங்கை காடுட் பசுமை வட்டாரம் இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
“பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள இந்த முயற்சிகள் உதவும். வாழ்வதற்கு ஏதுவான, நீடித்த நிலைத்தன்மையுடனான சுற்றுப்புறத்தை சிங்கப்பூரர்களுக்கு இது தரும்,” என்று ஜூரோங் தீவில் நேற்று நடைபெற்ற மரம் நடும் விழாவின்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் லீ கூறினார்.
நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வில் பங்கேற்றோர் ஜூரோங் தீவில் 100 மரங்களை நட்டனர். கொவிட்-19ஐ முன்னிட்டு பாதுகாப்பான தூர இடைவெளி முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இந்த மரம் நடும் விழா நடைபெற்றது.
வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியின் பூன் லே தொகுதியைச் சேர்ந்த குடியிருப்பாளர்களும் ஜூரோங் தீவில் உள்ள 32 நிறுவனங்களின் பிரதிநிதிகளும் நிகழ்வில் பஙகேற்றனர்.
இத்தகைய நிகழ்வில் இத்தனை பேர் பங்கேற்றது இதுவே முதல்முறை.
2022ஆம் ஆண்டுக்குள் ஜூரோங் தீவில் கூடுதலாக 21,000 மரங்களை நட அதிகாரிகள் இலக்கு கொண்டுள்ளனர். 2022ஆம் ஆண்டுக்குள் ஜூரோங் தீவில் மொத்தம் 44,000 மரங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.