தொடர்புகளின் தடங்களைக் கண்டறியும் 'டிரேஸ் டுகெதர்' கருவிகளைப் பெற்றுக் கொள்வதில் சிங்கப்பூரர்கள் அவசரப்பட வேண்டியதில்லை என்று அறிவார்ந்த தேசம் திட்டத்திற்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தற்போது 38 சமூக நிலையங்களில் ‘டிரேஸ்டுகெதர்’ கருவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும். அடுத்த மாத இறுதிக்குள் தீவு முழுவதும் உள்ள 108 சமூக நிலையங்களில் பொதுமக்கள் அவற்றைப் பெற்றுக்கொள்ளலாம்.
சிங்கப்பூரர்கள் தாங்கள் வசிக்கும் குடியிருப்புப் பேட்டைகளுக்கு அருகில் உள்ள சமூக மன்றங்களில் கருவிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு டாக்டர் பாலகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
அந்தந்த சமூக மன்றங்களில் விநியோகம் எப்போது தொடங்குகிறது என்பதைத் தெரிந்துகொள்ள Token Go Where எனும் இணையப் பக்கத்தைப் பொதுமக்கள் நாடலாம்.
உணவகங்கள், வேலையிடங்கள், பள்ளிகள், கடைத்தொகுதிகள் உள்ளிட்ட பொது இடங்களுக்குள் நுழைய ‘டிரேஸ்டுகெதர்’ செயலி அல்லது கருவியைப் பயன்படுத்துவது இவ்வாண்டு டிசம்பர் மாத இறுதிக்குள் கட்டாயமாக்கப்படும் என்று அரசாங்கம் அண்மையில் அறிவித்து இருந்ததைத் தொடர்ந்து அக்கருவிகளைப் பெற்றுக்கொள்ளும் ஒரு சில இடங்களில் கடந்த வாரயிறுதியில் கூட்டம் கூடியது.
இந்நிலையில், போன விஸ்தா சமூக மன்றத்தில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சருமான டாக்டர் பாலகிருஷ்ணன், போதுமான அளவு ‘டிரேஸ்டுகெதர்’ கருவிகள் வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளித்தார்.
பொதுமக்களிடம் ஏறத்தாழ 2.7 மில்லியன் கருவிகள் விநியோகிக்கப்படும் என்பது தற்போதைய இலக்கு. ஆனால், தேவையைப் பொறுத்து கருவிகளின் விநியோக எண்ணிக்கை சரிசெய்யப்படலாம் என்று அவர் சொன்னார்.
‘டிரேஸ்டுகெதர்’ கருவிகள் அறிமுகம் கண்டபோது, மூத்த குடிமக்களிடமும் திறன்பேசி வசதி இல்லாதோரிடமும் அவற்றை விநியோகிக்க முன்னுரிமை அளிக்கப்பட்டது.
ஆனாலும், சிங்கப்பூரர்கள் சிலர் செயலியைவிட கருவியைப் பயன்படுத்த விரும்புவதாகக் கருத்து தெரிவித்துள்ளதால் அவர்களின் விருப்பமும் கருத்தில்கொள்ளப்படுவதாக டாக்டர் பாலகிருஷ்ணன் விவரித்தார்.
‘டிரேஸ்டுகெதர்’ திட்டத்தில் மக்களின் பங்கேற்பு முக்கியம் என்பதால் அவர்களின் விருப்பத்திற்கேற்ற தெரிவை வழங்க நான் விழைகிறேன்,” என்றார் அவர்.
தற்போது 2.5 மில்லியனுக்கும் அதிகமானோர் ‘டிரேஸ்டுகெதர்’ செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளதாகவும் 400,000க்கும் அதிகமான கருவிகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் டாக்டர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.