உலகின் செல்வாக்குமிகுந்த 500 முஸ்லிம்கள் இடம்பெறும் பட்டியலில், சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப் தொடர்ந்து முதல் 50 இடங்களில் உள்ளார்.
2017ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் முதல் பெண் அதிபரான திருவாட்டி ஹலிமா, அப்பட்டியலில் 37வது இடத்தில் உள்ளார். 2021ஆம் ஆண்டு பதிப்புக்கான ‘தி முஸ்லிம் 500’ எனும் அப்பட்டியலின் முதல் 50 இடங்களில் இடம்பெறும் ஒரே சிங்கப்பூரராவார் திருவாட்டி ஹலிமா.
ஜோர்டானில் உள்ள அரச இஸ்லாமிய உத்திபூர்வ கல்வி நிலையம் இந்தப் பட்டியலைத் தொகுத்துள்ளது.
இம்முறை 12வது முறையாக தொகுக்கப்பட்டுள்ள இந்த வருடாந்திர பட்டியலில், உலகம் முழுவதுமுள்ள முஸ்லிம்கள் அவரவர் சமூகத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தைப் பொறுத்து அவர்கள் தரநிலைப்படுத்தப்படுகின்றனர்.
இப்பட்டியலில் அதிபரின் நிலை குறித்து விவரித்த கல்வி நிலையம், “அதிபராக, ஒன்றுபட்ட சமுதாயத்தை உருவாக்குவதில் அவர் பல திட்டங்களை ஊக்குவித்துள்ளார். சமயங்களுக்கு இடையிலான பிணைப்பை வலுப்படுத்தியதோடு, சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ள அனைத்து ஊழியர்களையும் அவர் அங்கீகரித்துள்ளார்,” என்று குறிப்பிட்டது.
உலகத் தலைவர்களை அடிக்கடி சந்திக்கும் அதிபர் ஹலிமாவுக்கு அனைத்துலக அளவில் நல்ல செல்வாக்கு இருப்பதாகவும் அந்நிலையம் கூறியது.
2018ஆம் ஆண்டு பதிப்புக்கான ‘தி முஸ்லிம் 500’ பட்டியலில் திருவாட்டி ஹலிமா சேர்க்கப்பட்டார். அப்போது அப்பட்டியலின் 45வது இடத்தில் அவர் இருந்தார்.
2019ல் 41வது நிலையிலும் இவ்வாண்டிற்கான பதிப்பில் 38வது நிலையிலும் அவர் இருந்தார்.
கடந்த ஆண்டு ஒன்றுபட்ட சமுதாயங்கள் குறித்த அனைத்துலக மாநாடு ஒன்று முதன்முறையாக நடைபெற்றது. சமயங்களுக்கு இடையிலான கருத்தரங்கு ஒன்றை நடத்துவது குறித்த யோசனையை அதிபர் ஹலிமா முன்வைத்ததைத் தொடர்ந்து இந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கிட்டத்தட்ட 40 நாடுகளைச் சேர்ந்த ஏறத்தாழ 1,000 பிரமுகர்கள் பங்கேற்றனர்.