சிங்கப்பூரின் அனைத்து குடிநுழைவு சோதனைச்சாவடிகளிலும் இனி கைவிரல் ரேகைக்குப் பதிலாக முகம், கருவிழி மூலம் பயணிகளை அடையாளம் காண்பதே முதன்மையான வழியாக இருக்கும் என்று குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் தெரிவித்துள்ளது.
தங்களது கருவிழி, முக அடையாளங்களைப் பதிவுசெய்துள்ள சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள், நீண்டகால அனுமதி அட்டை வைத்திருப்போர், பிற பயணிகள் ஆகியோர் அனைத்து நில, கடல், ஆகாயவழி சோதனைச்சாவடிகளிலும் புதிய வருடிகளை (ஸ்கேனர்) பயணத்தின்போது பயன்படுத்தலாம்.
இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட, அதாவது தகுதியுள்ள சிங்கப்பூரர்களில் 70 விழுக்காட்டினரும் 130,000 நிரந்தரவாசிகளும் தங்களது கருவிழி, முக அடையாளங்களைப் பதிவுசெய்துள்ளனர்.
சோதனைச்சாவடிகளில் கருவிழி, முக அடையாளங்களை வருடும் முயற்சி தோல்வியில் முடியும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பயணிகள் கைவிரல் ரேகைகளைப் பயன்படுத்தலாம் என்று ஆணையம் தெரிவித்து இருக்கிறது.
2022ஆம் ஆண்டிலிருந்து சிங்கப்பூர்வாசிகள் அனைவரும் கடப்பிதழைத் தராமலேயே குடிநுழைவு அனுமதியைப் பெற ஆணையம் திட்டமிட்டு வருகிறது.