சிங்கப்பூரில் மேலும் எழுவருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக இன்று (அக்டோபர் 29) அறிவிக்கப்பட்டது. அவர்களையும் சேர்த்து இங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 57,994 ஆக உள்ளது.
உள்ளூரில் யாருக்கும் புதிதாக கிருமித்தொற்று பதிவாகவில்லை.
இன்று புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்ட அனைவரும் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்கள். அவர்கள் இங்கு வந்தவுடன் வீட்டில் இருக்கும் உத்தரவு பிறக்கப்பட்டது.
இதற்கிடையே, கிருமி தொற்றியவர்கள் சென்றிருந்த இடங்களின் பட்டியலில் ஜூரோங் வெஸ்டில் உள்ள ஒரு உடற்பயிற்சிக்கூடம், அப்பர் தாம்சன் பகுதியில் இருக்கும் ஐஸ்கிரீம் கடை, சாங்கி விமான நிலையம் முனையம் 3ல் உள்ள உணவுக்கடை ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சிங்கப்பூரில் நேற்று புதிதாக எழுவருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. அவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்தவர்கள்.
அவர்களில் அறுவர் வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள், ஒருவர் நிரந்தரவாசி. அவர்கள் பெல்ஜியம், சுவிட்சர்லாந்து, மியன்மார், பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து வந்தவர்கள்.
சிங்கப்பூரில் கொரோனா தொற்றால் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலக அளவில் இதுவரை 43.9 மில்லியன் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1.16 மில்லியன் மக்கள் உயிரிழந்தனர்.