ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு வேலை தேடி சுற்றுப்பயண விசாவில் சென்ற கேரளாவைச் சேர்ந்த 31 வயது ஆடவர் காணாமல் போயிருப்பதாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
கொவிட்-19 சூழலால் வேலையின்றி தவித்த செனோத் துருதும்மால் ஆஷிக் எனும் அந்த ஆடவர் துபாயில் கடந்த சனிக்கிழமை முதல் காணவில்லை.
இன்டர்நேஷனல் சிட்டியில் உள்ள பெர்சியா குழும குடியிருப்புகளில் நண்பர்களுடன் தங்கியிருந்த அவர், கடந்த சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் காலாற நடந்து வெளியில் சென்றதாக அவரது நண்பர் அல்தாஃப் சி.ஏ. குறிப்பிட்டார்.
ஆஷிக்குடன் வீட்டில் இருந்த ரமேஷ் என்பவர் தம்முடைய முகக்கவசம், பணப்பை ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தாமும் உடன் வருவதாகக் கூறினார். ஆனால், அந்தப் பொருட்களை எடுத்துக்கொண்டு கட்டடத்தின் கீழ்த்தளத்துக்கு ரமேஷ் வந்தபோது அங்கு ஆஷிக்கை காணவில்லை.
வெளியில் சென்றபோது கைபேசி, பணப்பை, பாஸ்போர்ட் உட்பட எந்தப் பொருளையும் ஆஷிக் உடன் கொண்டு செல்லவில்லை.
கடந்த அக்டோபர் மாதம் 17ஆம் தேதி துபாய்க்குச் சென்றது முதல் வீட்டுக்குள்ளேயே ஆஷிக் இருந்ததாகக் கூறப்படுகிறது.
தனிமைப்படுத்தல் காலத்துக்குப் பிறகு அபுதாபிக்குச் செல்ல வேண்டிய ஆஷிக் அங்கும் செல்லவில்லை.
அபுதாபியில் உள்ள மளிகைக் கடையில் வேலை வாங்கித் தருவதாக அவர்களது நண்பர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.
எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனத்தில் நான்காண்டுகளாக தொழில்நுட்ப உதவியாளராகப் பணி புரிந்த ஆஷிக், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வேலை இழந்தார்.
தாயகத்துக்குத் திரும்பிய அவர், சில காலம் வேலையின்றி இருந்தார். பின்னர் பெங்களூருவில் வேலைக்கு சேர்ந்தார். ஆனால், கொவிட்-19 கொள்ளை நோய் காரணமாக அங்கும் அவர் தொடர்ந்து பணியாற்ற முடியவில்லை.
அதனையடுத்து, அல்தாஃபும் மற்றொரு நண்பரும் ஆஷிக்கை ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு அழைத்து வந்து வேலை ஏற்பாடு செய்து கொடுக்க முடிவு செய்தனர்.
துபாய்க்கு வந்த பிறகு ஆஷிக் தமது குடும்பத்தினரிடம்கூட சரியாகப் பேசவில்லை என்றார் அல்தாஃப்.
கையில் பணமின்றி, தனக்குப் பரிச்சயமில்லாத துபாயில் ஆஷிக் எங்கு சென்றார் என்பது தெரியாமல் தவிப்பதாக அல்தாஃப் குறிப்பிட்டார்.
அல்தாஃப் தங்கியுள்ள புளோக்கிலிருந்து ஏழு புளோக்குகளுக்கு அப்பால், ஆஷிக் நடந்து செல்வதை கண்காணிப்பு கேமரா காட்டியுள்ளது.
ஆஷிக் காணாமல் போனது குறித்து துபாயில் உள்ள இந்தியத் தூதரகத்துக்கும் போலிசுக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
“ஆஷிக் பாதுகாப்பாக திரும்பி வந்தால் போதும்,” என வருத்தத்துடன் குறிப்பிட்டார் அல்தாஃப்.