லிட்டில் இந்தியா வர்த்தகர்களுக்கு இவ்வாண்டு தீபாவளி விற்பனை இன்ப அதிர்ச்சியாக அமைந்தது. கொவிட்-19 நெருக்கடியால் பல மாதங்களாக வியாபாரம் இல்லாமல் முடங்கிக் கிடந்த பலரும் தீபாவளி வியாபாரம் குறித்து மிகுந்த நம்பிக்கை கொள்ளவில்லை. அதனால் புதிய பொருள்கள் இறக்குமதியையும் கொள்முதலையும் சற்று அச்சத்துடனும் கவனமாகவும் செய்தனர்.
ஆனால், அவர்கள் நினைத்ததற்கு மாறாக, கடந்த ஒரு மாதத்திற்கு முன்னரே வர்த்தகம் சூடுபிடிக்கத் தொடங்கியது.
சிராங்கூன் சாலை, பஃப்ளோ சாலை, கேம்பல் லேன், டன்லப் ஸ்திரீட், அப்பர் டிக்சன் சாலை என லிட்டில் இந்தியாவில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பல பகுதிகளிலும் கடை வைத்துள்ளோருக்கு இந்தத் தீபாவளி செழிப்பான விழாக்காலமாக அமைந்தது.
பெருவாரியான ஆதரவு தந்த உள்ளூர்வாசிகள், மலேசியர்கள்
தீபாவளி எக்ஸ்போ, விற்பனைச் சந்தைகள் இல்லாத காரணத்தால் நிரந்தரமாக செயல்படும் கடைகளுக்கு வாடிக்கையாளர்களின் வருகை அதிகமாக இருந்தது என்றார் தேக்காவில் ஐந்து கடைகளை வைத்திருக்கும் ‘மஹிஷா கலெக்ஷன்ஸ்’ உரிமையாளரான திரு முருகையன் இளங்கோ, 48.
“விற்பனைச் சந்தையில் கடைகள் எடுத்து நடத்தினால் அதற்கே கிட்டத்தட்ட $20,000 செலவாகும். இம்முறை அது இல்லாததால் மக்கள் வழக்கமாக இயங்கும் கடைகளுக்கு வந்தனர். அங்கும் இங்கும் செல்ல வேண்டிய அலைச்சலும் இல்லை. கடந்த ஆண்டைவிட இவ்வாண்டு வியாபாரம் 40% அதிகமாக இருந்தது. சிங்கப்பூரில் வேலை செய்யும் மலேசியர்கள் பலரும் புத்தாடைகளை வாங்கிச் சென்றனர்,” என்றார் திரு இளங்கோ.
அதே நேரத்தில், வெளிநாட்டு ஊழியர்களின் வருகை குறைவாக இருந்தது சில கடைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியது.
“தீபாவளிக்கு வேட்டி, சட்டை வாங்குவதற்காக கணிசமான எண்ணிக்கையில் வெளிநாட்டு ஊழியர்கள் வருவார்கள். இவ்வாண்டு அவை கிட்டத்தட்ட 50%தான் விற்பனையாகின,” என்றார் ‘ஸ்ரீ கணேஷ் டெக்ஸ்டைல்ஸ்’ உரிமையாளர் திரு ராஜேந்திரன்.
“வழக்கமாக தீபாவளித் திருநாளுக்காக விடுமுறை எடுத்து அதிகமான இந்திய ஊழியர்கள் சொந்த ஊர் செல்வர். இல்லை எனில், இந்தியா செல்லும் நண்பர்கள் மூலமாகவோ, ‘கூரியர்’ சேவை மூலமாகவோ குடும்பத்தினருக்குப் பொருள்களை வாங்கி அனுப்புவர். இம்முறை அந்த வியாபாரம் நடக்கவே இல்லை,” என்றார் ‘சங்கம் டெக்ஸ்டைல்ஸ்’ ஊழியர் திருவாட்டி பாக்கியலட்சுமி.
ஆயினும், வெளிநாட்டு ஊழியர்கள் வராத குறையை மலேசியர்களும் உள்ளூர்வாசிகளும் தீர்த்து வைத்தனர் என்று சொன்னார் ‘மினோரா ஜுவல்ஸ்’ நகைக்கடையின் திருவாட்டி இந்திரா.
“இவ்வாண்டு தீபாவளி அமோகமாக அமைந்தது. புதிய ‘டிசைன்’ களை நாங்கள் தருவித்ததோடு விலையையும் மற்ற கடைகளைவிட குறைத்து விற்றோம். அதனால் நாங்கள் இதுவரை காணாத அளவிற்குத் தீபாவளி வியாபாரம் நடந்தது,” என்று அவர் கூறினார்.
தையல் தொழில் அமோகம்
இந்தத் தீபாவளிக்குப் பல தையல் கடைகளிலும் தொழில் சிறப்பாக இருந்தது. தீபாவளிக்கு ஏறத்தாழ இரண்டு வாரங்களே இருந்தபோது தையற்காரர்கள் பலருக்கும் வேலைகள் குவிந்தன.
“தீபாவளிக்கு ஏறக்குறைய 2,000 தையல் வேலைகள் செய்தோம். சிங்கப்பூரர்கள், மலேசியர்கள் எனப் பலரும் வெளிநாடுசென்று தைக்க முடியாததால் எங்களை நாடி வந்தனர். தீபாவளிக்குப் பத்து நாள்களுக்கு முன்னரே புதுக் கோரிக்கைகள் எடுப்பதை நிறுத்திவிட்டோம்,” என்றார் தேக்கா சந்தையில் 15 ஆண்டுகளாக ‘டீலக்ஸ் ஃபேஷன்’ தையல் கடையை நடத்தி வரும் திரு மு. வேலுச்சாமி, 53.
வழக்கமாக தீபாவளிக்கு ஒரு வாரத்திற்கு முன்னர்தான் வியாபாரம் சூடுபிடிக்கும் என்றும் ஆனால் இவ்வாண்டு ஒரு மாதகாலமாகவே வியாபாரம் அதிகமாக இருந்தது என்றும் சொன்னார் ‘ஷாருக்கான்’ துணிக்கடையின் திருவாட்டி நவமணி, 51.
“இம்முறை வாடிக்கையாளர்கள் பலரும் பேரம் பேசாமல் சொன்ன விலைக்கு வாங்கிச் சென்றனர். கொரோனா தொற்று பிரச்சினை தொடங்கியபோது வியாபாரம் துவண்டுபோனது. தீபாவளிக்கு ஒரு மாதம் இருந்த நிலையில் வியாபாரம் சூடுபிடிக்கத் தொடங்கியது. கடந்த பல மாதங்களில் ஏற்பட்ட இழப்பை தீபாவளி மூலம் பல கடைகளும் ஈடுகட்டிவிட்டன,” என்று திருவாட்டி நவமணி கூறினார்.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக தீபாவளிக்கு கைப்பட பலகாரங்களைச் செய்து விற்று வருகிறது ‘கதிஜா பேக்ஸ்’. இவ்வாண்டு நேரடி கடை எடுத்து நடத்த திட்டமிடாமல் இணையம் வழியாக விற்க முயன்றதாகச் சொன்னார் அந்தப் பலகாரக் கடையின் உரிமையாளர் திருவாட்டி கதிஜா பேகம், 53.
“ஆனால், தயார் செய்து வைத்த பலகாரங்களை இணையம் மூலம் விற்பது கடினமாக இருந்தது. கடை வைத்து விற்றபோது எதிர்பார்க்காத அளவிற்கு வியாபாரம் ஆனது. சென்ற ஆண்டைவிட இரண்டு மடங்கு அதிகமாக விற்றோம்,” என்றார் திருவாட்டி கதிஜா.
விற்றுத் தீர்ந்த பழைய சரக்கு
வீட்டு உபயோக, அலங்காரப் பொருள்களை விற்கும் ஒரு கடை, இந்தத் தீபாவளிக்கெனப் பிரத்தியேகமாக சரக்குக் கொள்முதல் செய்யவில்லை. வழக்கமாக தீபாவளிக்காகக் கிட்டத்தட்ட $100,000 மதிப்பிலான பொருள்களை இறக்குமதி செய்யும் அக்கடை, இம்முறை இருப்பில் இருந்த பொருள்களை விற்றுத் தீர்த்தது.
பெயர் கூற விரும்பாத அந்தக் கடையின் ஊழியர் ஒருவர், “விற்க முடியாது என்று இதுவரை நினைத்திருந்த பழைய சரக்குகளை இம்முறை விற்றுவிட்டோம்,” என்றார்.
“இவ்வாண்டில் பட்ட இழப்பை எல்லாம் தீபாவளி வியாபாரத்தைக் கொண்டு சரிசெய்துவிட்டோம்,” என்று நிம்மதிப் பெருமூச்சுவிட்டார் ஆடை அணிகலன்கள் விற்கும் 64 வயதான திரு தியாகராஜன்.
முதல்முறையாக முழுக் கடைவீட்டை ஒன்றரை மாதம் தற்காலிக வாடகைக்கு எடுத்த ‘பாவாஸ் டெலிகசி’ நிறுவனம், வியாபாரம் சிறப்பாக இருந்ததால் டன்லப் ஸ்திரீட்டில் நிரந்தரமாகத் தொழில் செய்யத் திட்டமிட்டு வருகிறது.
அதிக விலையால் அதிர்ச்சி
தீபாவளி வியாபாரம் வர்த்தகர்கள் பலருக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தாலும் பொருள்களின் விலை அதிகமாக இருந்ததாக வாடிக்கையாளர்கள் பலரும் மனக்குறைப்பட்டனர்.
“எதிர்பார்த்த அளவிற்கு தீபாவளிக்குத் தேவையான எல்லா பொருள்களும் தேக்காவில் உள்ள கடைகளில் கிடைத்தாலும் விலைஅதிகமாகவே இருந்தது,” என்றார் திருமதி சாந்தி பழனியப்பன், 48.
“நான் தேக்கா நிலையத்தில் ஒரு கடையில் $50க்கு சுடிதார் வாங்கினேன். அகலம் அதிகமாக இருந்ததால் தையற்காரரிடம் சென்றேன். அதற்கு அவர் 35 வெள்ளி தையற்கூலி கேட்டதால் அதிர்ச்சியில் உறைந்துபோனேன்,” என்று மனம் குமுறினார் குமாரி திவ்யலட்சுமி கணேசன், 26.
இம்முறை பட்டாசு இறக்குமதி குறைவாக இருந்ததாகக் கடைக்காரர்கள் தெரிவித்தனர். ஆயினும், அவை கொள்ளை விலைக்கு விற்கப்பட்டதாகக் கூறி ஆதங்கப்பட்டார் திருவாட்டி கல்பனா, 38.
“ஒரு கம்பி மத்தாப்புப் பெட்டியில் இருந்து மூன்று பாக்கெட்டுகளை வெளியில் எடுத்து, அது 20 வெள்ளி எனக் கடைக்காரர் சொன்னதால் வாங்காமல் வீடு திரும்பிவிட்டேன்,” என்றார் அவர்.
கால்கடுக்கக் காத்திருப்பு
அதேபோல, பூ, பலகாரம், அலங்காரம், இறைச்சி, காய்கறி, மளிகை போன்ற பொருள்களை விற்கும் கடைகளில் தீபாவளி தினத்தை ஒட்டிய நாட்களில் வாடிக்கையாளர் கூட்டம் அதிகமாக இருந்ததால் பலரும் வெகுநேரம் காத்திருக்க வேண்டியதாயிற்று.
“இரண்டு மணி நேரத்திற்கு மேலாக இறைச்சி வாங்க வரிசையில் நின்றேன். எனது முறை வந்தவுடன் நான் கேட்ட இறைச்சி வகைகள் விற்றுத் தீர்ந்துவிட்டதாகக் கடைக்காரர் கூறினார். அதனால் கிடைத்ததை வாங்கி வர வேண்டியதாயிற்று,” என்று புலம்பினார் திரு தமிழவேல், 41.
“இனிப்புப் பலகாரங்களை நான் எப்போதும் லிட்டில் இந்தியா ஆர்கேட்டில் உள்ள கடையில்தான் வாங்குவேன். ஆனால் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இம்முறை நீண்ட வரிசையில் கால்கடுக்க நிற்க வேண்டியிருந்தது,” என்றார் 65 வயதான திரு புகழேந்தி.