வங்கக் கடலில் உருவான நிவர் புயல் நாளை (நவம்பர் 25) மகாபலிபுரம்- காரைக்கால் இடையே கரையைக் கடக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இந்தப் புயல் பாதிப்பால் உயிர்ச்சேதம் ஏற்பட்டுவிடாமல் பாதுகாக்கும் வகையில் சுகாதாரத் துறை சாா்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் சுகாதாரத்துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் பேசுகையில், “தமிழகம் முழுவதும் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்கள் ஆகியவை 24 மணி நேரமும் செயல்படும்.
“மருத்துவா்கள், தாதியா்கள் பணியில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் ஜெனரேட்டா் சாதனங்களைப் பழுதின்றி வைத்திருக்க வேண்டும். சுவா் இடிந்து விழுவது, இடி- மின்னல், பாம்பு, பூச்சிக் கடிகள் ஆகியவற்றுக்கு சிகிச்சையளிப்பதற்குத் தேவையான மருந்துகளும் போதிய அளவில் இருப்பு வைத்திருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது,” என்றார் அவர்.
கடந்த 2018ல் பெருத்த சேதத்தை ஏற்படுத்திய கஜா புயலைப் போன்று நிவர் புயலும் தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று அஞ்சப்படுவதால், முன்னெச்சரிக்கை நடிவடிக்கையாக மீட்புப் பணிகளில் ஈடுபட சென்னையில் இருந்து சீர்காழிக்கு 35 பேர் கொண்ட பேரிடர் மீட்புக் குழுவினர் வந்துள்ளனர்.
இதற்கிடையே, புயல் நேரத்தில் அதிகாரபூர்வ தகவல்களை மட்டுமே மக்கள் அறிந்துகொள்ளும்படியும் சமூக ஊடகத் தகவல்களை மக்கள் நம்பவேண்டாம் என்றும் வருவாய், பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவுறுத்தி உள்ளார்.
நிவர் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அரசு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ள தாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக சென்னை எழிலகத்தில் இருந்து முதல்வர் தெரிவித்துள்ளார்.