சிங்கப்பூரில் புதிதாக எழுவரிடம் கொரோனா கிருமித்தொற்று உறுதியான நிலையில், உள்ளூரில் தொற்று ஏற்பட்டு 15 நாட்களாகிவிட்டன.
இன்று உறுதிசெய்யப்பட்ட ஏழு கிருமித்தொற்று சம்பவங்களும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் தொடர்புடையவை. சிங்கப்பூர் வந்தவுடன் அவர்களுக்கு வீட்டில் இருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இங்கு இதுவரை 58,190 பேர் கொரோனா கிருமித்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
நேற்று 18 புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் அறிவிக்கப்பட்டன. 13 வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்கள், நெதர்லாந்து, இந்தோனீசியா நாடுகளிலிருந்து வந்த இரண்டு சிங்கப்பூரர்கள் ஆகியோர் இதில் அடங்குவர்.
வேலை அனுமதி அட்டை வைத்திருக்கும் 37 வயது ஆடவர், சார்ந்திருப்போர் அட்டை வைத்திருக்கும் 35 வயது மாது ஆகிய இருவரும் பாகிஸ்தானிலிருந்து வந்திருந்தார்கள். எஞ்சிய ஒருவர் குறுகியகால வருகை அட்டை வைத்திருப்பவர். 47 வயதுடைய அந்த ஆடவர், பிலிப்பீன்சிலிருந்து இங்கிருந்த கப்பலில் பயணம் செய்ய வந்திருந்ததாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் பிப்ரவரி 3ஆம் தேதிக்குப் பிறகு முதன்முறையாக கொவிட்-19 கிருமிக்குழுமங்கள் எதுவும் சிங்கப்பூரில் தற்போது இல்லை என்று அமைச்சு தெரிவித்துள்ளது. 15 பெஞ்சுரு வாக்கில் அமைந்துள்ள காசியா@பெஞ்சுருவில் இருந்துவந்த கிருமித்தொற்று குழுமத்தில் 28 நாட்களாக எந்த ஒரு புதிய கிருமித்தொற்று சம்பவமும் இல்லாததால் அக்குழுமம் மூடப்பட்டது.
தொடர்ந்து 37 பேர் மருத்துவமனையிலும் 39 பேர் சமூக வளாகங்களிலும் கிருமி பாதிப்பிலிருந்து குணமடைந்து வருகின்றனர். கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.