வில்சன் சைலஸ்
முதல் நிலை மாணவர், ஆசிரியர்களைக் கவர்ந்தவர், துடிப்புமிக்கவர், சுறுசுறுப்பானவர் என ஆறு வயது ரோஹினை மெச்சுபவர்கள் ஏராளம். கல்வியிலும் வாழ்க்கையிலும் சிறந்து விளங்கவேண்டும் என்ற உத்வேகத்துடன் செயல்பட்டு வரும் இந்த இளம் பிஞ்சு, 'ஆர்த்ரோகிரைபோசிஸ்' எனும் மூட்டு முடக்க நோயால் பிறப்பு முதல் பாதிக்கப்பட்டவர். கை, கால்களில் உள்ள மூட்டுப் பிரச்சினையால் உண்பது, உடுப்பது ஆகிய அடிப்படைத் தேவை களுக்குக்கூட மற்றவர்களை எதிர்பார்க்கும் நிலையில் இருக்கும் ரோஹின், தமது பள்ளியின் ஆண்டு இறுதி நிறைவு நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றுவதற்குத் தேர்வு செய்யப்படும் அளவிற்குச் சிறந்த மாணவராகத் திகழ்ந்தார். சாரதா பாலர் பள்ளியில் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பயிலும் இவர், தன்னம்பிக்கையுடன் மனனம் செய்த தமது உரையை கடந்த மாதம் சரளமாகவும் தெளிவாகவும் பேசி அனைவரின் பாராட்டையும் பெற்றார்.
இதுபோன்ற சிறுசிறு வெற்றிகளை ரோஹின் அடைய பக்க பலமாக இருந்து கைகொடுத்து வருகின்றனர் அவரது தந்தை திரு ஆனந்த் ராஜூ, தாய் திருமதி மகாலட்சுமி ஆனந்த். உடற்குறையுடன் பிறந்துவிட்டான் என வருந்துவதை விடுத்து சாதனையாளராக தங்கள் மகனை வளர்ப்பதே இத்தம்பதியினரின் குறிக்கோள். அதிர்ச்சி, அச்சம், அழுகை இரண்டு வயது மகளின் பிறந்தநாளுக்கு இன்னும் சில நாட்களே இருந்தன. கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டு மகிழ்ச்சியுடன் காத்திருந்த ஆனந்த், மகா தம்பதியினர் எதிர்பாராத ஓர் அதிர்ச்சியை அன்று எதிர்கொண்டனர்.
அன்று ஏப்ரல் 28. ரோஹின் பிறந்த நாள். மகளின் பிறந்தநாளுக்கு முன்பு கிடைத்த இன்னொரு பரிசாக ரோஹினை எண்ணியிருந்தார் திரு ஆனந்த். ஆனால், குறைபாட்டோடு பிறந்த ரோஹினைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்த அவர், "உலகமே சுக்குநூறாக உடைந்துவிட்டது," எனக் கண்ணீர் மல்கச் சொன்னார். "இதுபோன்ற குறைபாட்டுடன் பிறந்த குழந்தையை இதற்கு முன் கண்டதில்லை," என மருத்துவர்களும் கைவிரித்து விட்டனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் பிள்ளை. பிள்ளையைத் தேடும் தாய். மனைவியிடம் எப்படி விளக்குவது எனத் தெரியாமல் தவித்தார் ஆனந்த். ஒரு வழியாக சூழ்நிலையைக் கிரகித்துக்கொண்ட ஆனந்தும் மகாவும் கனத்த இதயங்களுடன் கண்ணீரோடு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர். ரோஹினோ சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருக்க வேண்டியிருந்தது.
"கிட்டத்தட்ட ஒரு வாரத்தை மருத்துவமனையில் கழித்த ரோஹினை அன்றாடம் சென்று பார்த்தோம். அடுத்த மூன்று மாதங்களில் விரல்கள், கால், இடுப்பு ஆகியவற்றில் ஐந்து அறுவை சிகிச்சைகளை ரோஹின் மேற்கொள்ள நேரிட்டது," என்றார் 34 வயது திருமதி மகா. ரோஹினை வீட்டிற்கு அழைத்து வந்த பிறகும் முழுநேரமாக மகனைப் பார்த்துக்கொள்ள வேலை யைக் கைவிட்டார் அவர். இரண்டு மாதச் சம்பளம் இல்லா விடுப்பு எடுத்து வீட்டில் இருந்தார் திரு ஆனந்த். "வெளியே செல்வது போன்றவற்றை முற்றுமாகக் குறைத்துக் கொண்டு வீடே கதி எனக் கிடந்தோம். சமுதாயத்தையும் விட்டு தள்ளி இருந்தோம்," என்ற திருமதி மகா, பிரசவத்திற்கு பிந்திய மன உளைச்சலுக்கும் ஆளானார். உறுதுணையாக இருந்த கணவரின் அரவணைப்பால் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் கழித்தே மன உளைச்சலிலிருந்து மகாவால் விடுதலையாக முடிந்தது. "ஆனந்த் இல்லையெனில் என் நிலை இப்போது எப்படி இருக்கும் என்று தெரியாது," என்ற மகா, அப்படிப்பட்ட சூழ்நிலையிலிருந்து மீள்வதற்குத் தமது மகளும் ஒரு காரணம் என்றார்.
தாய் திருமதி மகாலட்சுமி ஆனந்த், தந்தை திரு ஆனந்த் ராஜூ, அக்காள் ஷர்வாணி ஆகியோருடன் ரோஹின். படம்: திமத்தி டேவிட்