ஹாங்காங்கிலிருந்து கடல்வழியாகத் தப்பிச்செல்ல எண்ணிய 12 பேரை சீனா தடுத்துவைத்துள்ளது. அவர்களில் ஆக இளையவருக்கு 16 வயது மட்டுமே ஆகிறது. தற்பொழுது இந்த விவகாரத்தில் ஹாங்காங் அரசு தலையிடக் கோரி 18 நாடுகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹாங்காங் தலைமையை வலியுறுத்தியுள்ளனர்.
அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற குற்றச்சாட்டை எதிர்நோக்கும் இந்த 12 பேரும் ஆகஸ்ட் 23ஆம் தேதியன்று சீன அதிகாரிகளால் பிடிபட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரைப் பற்றியும் இதுவரை எவ்விதத் தகவலும் இல்லாத நிலையில் இவர்களை எவரும் சந்திக்க முடியாத நிலை இருந்துவருகிறது.
சட்டவிரோதமாக எல்லை கடந்தது, அதற்காகக் கும்பலைக் கூட்டியது போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குவதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லாமுக்கு 18 நாடுகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுதிய கடிதத்தில், “ஹாங்காங்கின் தலைமை நிர்வாகி என்ற முறையில் இந்த இளையர்களின் சார்பாக, அவர்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் நீங்கள் தலையிட வேண்டும். இதில் நீங்கள் தவறினால், ஹாங்காங் மக்களுக்காக சேவை ெசய்யவும் அவர்களின் நல்வாழ்வு, பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிசெய்யவும் உங்களுக்கு உள்ள பொறுப்பிலிருந்து நீங்கள் விலகியவர் ஆவீர்கள்,” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி கூறுகிறது.
அந்தப் பன்னிருவரும் ஹாங்காங்கிற்கு உடனடியாக திருப்பி அனுப்பப்பட வேண்டும். அத்துடன், அவர்கள் தங்களைப் பிரதிநிதிக்க வழக்கறிஞர்களை நியமிக்க அனுமதிக்கப்பட வேண்டும். மேலும், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அவர்களைச் சந்திக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆஸ்திரேலியா, கனடா, டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, இத்தாலி, ஜப்பான், லித்துவேனியா, மியன்மார், நெதர்லாந்து, நியூசிலாந்து, நைஜீரியா, நார்வே, சுவீடன், உகாண்டா, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.