இந்தோனீசியா 1.2 மில்லியன் முறை போடுவதற்கான கொவிட்-19 தடுப்பூசி மருந்து அளவைப் பெற்றுவிட்டது. இன்னும் இரண்டு வாரங்களில் தடுப்பூசி விநியோகத்துக்கான விதிமுறைகள் முடிவாகிவிடும் என்று தெரிவிக்கப்பட்டது.
கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிராக உருவாக்கப்பட்ட சீனாவின் ‘சினோவேக் பயோடெக்’ தடுப்பூசிகள், ஞாயிற்றுக்கிழமை இரவு ஒன்பது மணியளவில் ஜகார்த்தாவின் சுகார்னோ-ஹட்டா விமான நிலையத்தை அடைந்தன.
பின்னர் மேற்கு ஜாவாவில் உள்ள ‘பயோ ஃபார்மா’வின் வளாகத்திற்குத் தடுப்பூசி பொட்டலங்கள் கொண்டு செல்லப்பட்டன.
மேலும் 1.8 மில்லியன் ‘சினோவேக்’ தடுப்பூசி மருந்து அளவுகள் ஜனவரி மாதத்தில் கொண்டு வரப்படும் என்று கூறப்பட்டது.
தடுப்பூசி மருந்துகள் படிப்படியாக கொண்டுவரப்படுவது போல், தடுப்பூசியைப் போடும் திட்டமும் படிப்படியாகச் செயல்படுத்தப்படும் என்றும் மருத்துவ ஊழியர்களுக்கும் பொதுச் சேவை அதிகாரிகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அந்நாட்டு கொவிட்-19 பணிக்குழுவின் தலைவரும் அமைச்சருமான திரு ஏர்லங்கா ஹார்டார்டோ நேற்று தெரிவித்தார்.
சிலருக்கு தடுப்பூசி இலவசமாகப் போடப்படும். மற்ற சிலர் தடுப்பூசிக்கான செலவை ஏற்க வேண்டும் என்று பொருளியல் விவகார ஒருங்கிணைப்பு அமைச்சராகவும் உள்ள திரு ஏர்லங்கா கூறினார்.
தடுப்பூசிக்கான செலவை ஏற்பவர்கள், தங்களுக்கு விருப்பமான தடுப்பூசி மருந்து வகையைத் தேர்ந்தெடுக்கலாம். யார் முதலில் வருகிறார்களோ அவர்கள் இத்திட்டத்தின்கீழ் தகுதிபெறுவார்கள் என்று கூறப்பட்டது.
தடுப்பூசி போடும் திட்டத்தை அமல்படுத்துவதற்கான உறுதியான தேதியைக் குறிப்பிடாத நிலையில் ஜனவரி மாதத்தில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
தடுப்பூசிகளை எவ்வாறு நாடு முழுவதும் விநியோகிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது ஆலோசித்து வருகிறது. நாட்டின் 34 மாகாணங்களுக்கும் தடுப்பூசியை விநியோகிக்கும் கட்டமைப்பு உறுதியானதும் பணிகளைத் தொடங்கிவிடலாம் என்று அதிபர் ஜோக்கோ விடோடோ தெரிவித்தார்.
கிட்டத்தட்ட 10,134 சமூக சுகாதார நிலையங்களும் 2,877 மருத்துவமனைகளும் இத்திட்டத்தில் பங்கேற்கும் என்று கூறப்பட்டது.
ஆதரவு சாதனங்கள், மனித வளங்கள், விநியோகிக்கும் கட்டமைப்பு ஆகியவை உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே விநியோகப் பணிகள் தொடங்கும் என்று திரு ஜோக்கோவி கூறினார்.
இந்தோனீசியாவின் 270 மில்லியன் மக்களில் 107.2 மில்லியன் பேருக்குத் தடுப்பூசி மருந்து போடுவதே திட்டமாகும். 18 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்களே இதற்குத் தகுதிபெற்றுள்ளனர்.
பின்னாளில் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க, தடுப்பூசிக்கான அதன் கையிருப்பில் 15 விழுக்காட்டை இந்தோனீசியா சேமித்து வைத்துள்ளது.