மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பஞ்சாப் உள்ளிட்ட வட மாநில விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
மத்திய அரசு விவசாய பிரதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் வேளாண் சட்டத்தை திரும்பப் பெறும் வரையில் போராட்டம் தொடரும் என விவசாயிகள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த மூன்று வாரங்களாக நடந்து வரும் போராட்டத்தில் இதுவரை 22 விவசாயிகள் கடுங்குளிர் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்தைக் கண்டித்து பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பதவி விலகினார்.
அதனைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலம் முழுவதிலும் எதிர்ப்பு கிளம்பியது.
அப்போது முதல் பயணிகள் மற்றும் சரக்கு ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து விவசாயிகள் தலைநகர் டெல்லியில் நுழையும் போராட்டத்தை தொடர்கின்றனர்.
இதற்காக மாநிலத்திற்குள் நுழையும் வழிகளில் தடுத்து நிறுத்தப்பட்ட போதிலும், அங்கு நிலவி வரும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அங்கேயே தங்கியிருந்து பேராட்டத்தை நடத்தி வருகின்றனர்.