வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் சிங்கப்பூருக்குத் திரும்ப அனுமதி அளிக்கும் விதமாக அண்மையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பது கட்டுமானத் துறைக்கு நற்செய்தியாக அமைகிறது. புதிதாக வேலை அனுமதி அட்டை பெறுபவர்களும் சிங்கப்பூருக்கு வர அனுமதி அளிக்கப்படுகிறது.
மனிதவள அமைச்சு இம்மாத தொடக்கத்தில் இந்தக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி இருப்பதை சிங்கப்பூர் ஒப்பந்ததாரர்கள் சங்கம் வரவேற்றுள்ளது.
கொவிட்-19 சூழலால் நாட்டு எல்லை மூடப்பட்டிருப்பது காரணமாக கட்டுமானத் துறைக்கு கடுமையான மனிதவளப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் ஏறத்தாழ 1.3 மில்லியன் வெளிநாட்டு ஊழியர்கள் உள்ளனர்.
அவர்களில் ஏறக்குறைய 300,000 பேர் கட்டுமானத் துறையில் பணிபுரிகின்றனர்.
நோய்ப் பரவல் சூழலால் கட்டுமானத் துறை ஊழியர்களில் கிட்டத்தட்ட 15 விழுக்காட்டினர் சொந்த நாடுகளுக்குத் திரும்பினர்.
வேலை அனுமதிச் சீட்டு, எஸ்-பாஸ் அட்டை வைத்திருப்பவர்கள் சிங்கப்பூருக்குத் திரும்புகையில், இங்கு ஏற்கெனவே நடப்பில் உள்ள எல்லைக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்று மனிதவள அமைச்சு கூறியது.
அதாவது, சிங்கப்பூருக்குள் நுழைவதற்கு முன் சம்பந்தப்பட்ட அரசாங்க அமைப்புகளிடம் இருந்து ஊழியர்கள் ஒப்புதல் பெற வேண்டும்.
சிங்கப்பூருக்கு புறப்படுவதற்கு முன்பு தங்களது சொந்த நாட்டில் கொவிட்-19 பரிசோதனையை அவர்கள் செய்துகொள்ள வேண்டும்.
சிங்கப்பூருக்கு வந்தவுடன் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவையும் அவர்கள் நிறைவேற்ற வேண்டும்.