வெளிநாட்டு மனிதவள வேலை நியமனச் சட்டத்தின்கீழ் குற்றங்கள் புரிந்ததாக முன்னாள் வானொலி படைப்பாளர் டேனியல் ஓங் மிங் யூ, 45, மீதும் முன்னாள் மாடல் அழகி ஜேமி டியோ சாய் லின், 43, மீதும் இன்று (டிசம்பர் 29) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
இவர்கள் ‘டுவெல்வ் கப்கேக்ஸ்’ எனும் கேக் கடை நிறுவனர்களாவர். 2013க்கும் 2016ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தைவிட இவர்கள் குறைத்து வழங்கியதாகக் கூறப்படுகிறது.
2012க்கும் 2013ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் சில ஊழியர்களுக்கு சம்பளமே வழங்கப்படாத தருணங்கள் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
சம்பளத் தேதி முடிவடைந்த ஒருவார காலகட்டத்தில் அத்தகைய ஊழியர்களில் ஒருவருக்கு மாதச் சம்பளமான $2,000 வழங்கப்படவில்லை. 2012ஆம் ஆண்டு செப்டம்பர் 8க்கும் நவம்பர் 8க்கும் இடையில் இது நிகழ்ந்தது.
எட்டு ஊழியர்களுக்கான சம்பள விவகாரம் தொடர்பில் ஓங், டியோ இருவரும் தலா 24 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகின்றனர். டியோ, ஓங்கின் முன்னாள் மனைவியாவார்.
எதிர்வரும் ஜனவரி 26ஆம் தேதி தம் மீதான குற்றச்சாட்டுகளை டியோ ஒப்புக்கொள்ள இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஓங் மீதான வழக்கும் அன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அந்த கேக் கடையின் புதிய உரிமையாளரான ‘துன்சேரி’ குழுமம், 2017, 2018ஆம் ஆண்டுகளில் ஊழியர் சம்பளத்தைக் குறைத்து வழங்கியதன் தொடர்பில் 15 குற்றச்சாட்டுகளை முன்னதாக ஒப்புக்கொண்டது.
‘டுவெல்வ் கப்கேக்ஸ்’ கடை 2011ல் நிறுவப்பட்டது. கோல்கத்தாவைச் சேர்ந்த ‘துன்சேரி’ குழுமம் அதை 2016ல் வாங்கியது.
இந்தச் சம்பள விவகாரத்தில் தொடர்புடைய ஏழு ஊழியர்களும் அந்த நேரத்தில் எஸ்-பாஸ் வேலை அனுமதி வைத்திருந்ததாக நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டன. அந்தக் கடையில் அவர்கள் இன்னமும் பணிபுரிகின்றனரா என்பது பற்றி குறிப்பிடப்படவில்லை.
ஊழியர்களின் மாதச் சம்பளம் $2,200க்கும் $2,600க்கும் இடைப்பட்டிருந்தது. ஆனால், அவர்களுக்கு $1,400 முதல் $2,050 வரை மட்டுமே அந்நிறுவனம் வழங்கியது.
‘துன்சேரி’ குழுமம் அந்தக் கடையை வாங்கிய பிறகு, 2016 டிசம்பர் முதல் 2018 செப்டம்பர் வரை ஆறு ஊழியர்களுக்குச் சம்பளம் குறைத்து வழங்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அந்த அறுவரில் ஒருவருக்கு 2018 அக்டோபர், நவம்பர் மாதங்களிலும் சம்பளம் குறைத்து வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
2017 ஜனவரி முதல் 2018 செப்டம்பர் வரை, எஞ்சிய மற்றொரு ஊழியருக்கு நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தைவிட குறைத்து வழங்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
புதிய உரிமையாளர்களின்கீழ் செயல்பட்ட ‘டுவெல்வ் கப்கேக்ஸ்’ கடை, தொடக்கத்தில் ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் குறைந்த சம்பளத்தை வழங்கியிருந்தது.
பிறகு தனது உத்தியை மாற்றிக்கொண்ட அது, 2018 மே மாதத்தில் இருந்து ஊழியர்களுக்கு முழுச் சம்பளத்தையும் வழங்கிவிட்டு, பின்னர் சம்பளத்தின் ஒரு பகுதியை ஊழியர்கள் ரொக்கமாக நிறுவனத்திடம் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று கூறியது.
தமது குற்றங்களை மூடி மறைப்பதற்காகவே ‘டுவெல்வ் கப்கேக்ஸ்’ இவ்வாறு செய்ததாக மனிதவள அமைச்சு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறினார்.
அந்த நிறுவனத்திற்கு $127,000 அபராதம் விதிக்குமாறு அவர் வலியுறுத்தினார்.
இந்தக் குற்றங்கள் கண்டறியப்பட்டு இருக்காவிட்டால் அந்நிறுவனம் ஊழியர்களுக்குத் தொடர்ந்து சம்பளத்தைக் குறைத்து வழங்கி இருக்கும் என்றார் அவர்.