சிங்கப்பூர் இந்தியர் வர்த்தக, தொழில் சபை, தமிழர் பேரவை அமைப்புகளின் முன்னாள் தலைவரும் பல ஆண்டுகளாக இந்திய சமூகத்திற்குப் பல்வேறு வழிகளில் தொண்டாற்றியவருமான டாக்டர் ஆர் தேவேந்திரன் இன்று (டிசம்பர் 29) மாலை காலமானார்.
அவருக்கு வயது 79.
'எம்டிஐஎஸ்' எனும் சிங்கப்பூர் நிர்வாக மேம்பாட்டு கல்விக் கழகத்தின் பொதுச் செயலாளரும் ஸ்டாம்ஃபோர்ட் மீடியா இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான திரு ஆர் தேவேந்திரன், ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயம், சிலோன் ஸ்போர்ட்ஸ் கிளப் போன்ற அமைப்புகளின் தலைவராகவும் சேவையாற்றியுள்ளார்.
"அடித்தள நடவடிக்கைகளில், வர்த்தக, கல்விசார் அம்சங்களில் பங்காற்றிய இந்திய சமூகத்தின் வலுவான தலைவர் திரு தேவேந்திரன். இந்திய சமூகத்தின் வெவ்வேறு தேவைகளுக்கு அவர் நிதியுதவி வழங்கியுள்ளார்," என்று கூறினார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு சந்திர தாஸ்.
சிங்கப்பூர் இந்திய சமுதாயத்திற்கு திரு தேவேந்திரனின் மரணம் பெரிய இழப்பு என்று கூறினார் சிங்கப்பூர் இந்தியர் வர்த்தக, தொழில் சபையின் தலைவர் டாக்டர் டி. சந்துரு.
கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக அவருடன் தொடர்பில் இருப்பதாகக் கூறிய டாக்டர் சந்துரு, அவரை தமது ஆலோசகராகவும் எடுத்துக்காட்டாகவும் என்றும் பார்த்துவருவதாகக் கூறினார்.
கடந்த 2004ஆம் ஆண்டு கோ.சாரங்கபாணி கல்வி உதவி நிதியைத் திரட்டும் பணியில் அவருடன் பணியாற்றிய பசுமை நினைவுகளைப் பகிர்ந்த டாக்டர் சந்துரு, திரு தேவேந்திரனின் விடாமுயற்சி அன்று $1.1மில்லியன் நிதியைத் திரட்ட பேருதவியாக இருந்தது என்றார்.
சிங்கப்பூரின் தமிழ் அமைப்புகளுக்கும் தமிழ் சமூகத்திற்கும் அளப்பரிய பங்கை டாக்டர் தேவேந்திரன் ஆற்றியுள்ளார் என்று கூறினார் தமிழர் பேரவையின் தலைவர் திரு வெ.பாண்டியன்.
"தமிழர் பேரவை அமைப்பைப் புதிய உயரத்திற்குக் கொண்டுச் சென்றவர் அவர். பல புதிய திட்டங்களை அவரது தலைமைத்துவத்தின்கீழ் அவர் செயல்படுத்தினார். குறிப்பாக கல்வி உதவி நிதி, கல்வி உபகாரச் சம்பளம் என அவர் மாணவர்களுக்காக நிறைய செய்துள்ளார்," என்றார் திரு பாண்டியன்.
இதன் தொடர்பிலான விரிவான செய்திகளுக்கு தமிழ் முரசின் நாளைய அச்சுப் பிரதியை நாடவும்!