பிரபல கோமள விலாஸ் உணவகத்தின் உரிமையாளர் திரு ராஜு குணசேகரன் நேற்று பிற்பகல் காலமானார். அவருக்கு வயது 68.
இன்று பிற்பகல் அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது. அவருக்கு ஒரு மகனும் மூன்று மகள்களும் உள்ளனர். அவரது மனைவி கோமதி குணசேகரன் கடந்த ஆண்டு காலமானார்.
கடந்த 1947ஆம் ஆண்டு நிறுவப்பட்ட கோமள விலாஸ் சைவ உணவகத்தை நடத்திவந்தவர் திரு குணசேகரன். அவரது தந்தை திரு ஓஎம் ராஜு அந்த உணவகத்தை நிறுவினார்.
திரு குணசேகரன் சிங்கப்பூர் இந்திய உணவகங்கள் சங்கத்தின் தலைவராக 2000ஆம் ஆண்டிலிருந்து 2004ஆம் ஆண்டுவரை செயல்பட்டார்.
“வெளிப்படையாகப் பேசும் மனிதர் அவர். அவரது மறைவு சிங்கப்பூர் இந்திய உணவகங்களுக்கும் லிட்டில் இந்தியா வர்த்தகர்களுக்கும் சிங்கப்பூர் இந்திய சமூகத்துக்கும் இழப்பு,” என்றார் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கத்தின் தலைவர் திரு சி.சங்கரநாதன், 48.
பல சமூக நிகழ்ச்சிகளுக்குப் பொருள் ஆதரவு வழங்குவதோடு நேரடியாக கலந்துகொள்வார் திரு குணசேகரன்.
“பழமையை மறக்காமல் புதுமையையும் புகுத்தி வெற்றிகரமாகத் தொழில் நடத்திய பெருமை திரு குணசேகரனைச் சேரும்,” என்றார் அவரது நெருங்கிய நண்பர் என அடையாளப்படுத்திக் கொண்ட ஜோதி ஸ்டோர் புஷ்பக்கடையின் உரிமையாளர் திரு ராஜகுமார் சந்திரா, 62.
சமூக நிகழ்ச்சிகளுக்கு வாரி வழங்கிய வள்ளல் என்றும் அவரை வருணித்த அவர், அவரது மறைவு சிங்கப்பூர் இந்திய சமூகத்திற்குப் பெரும் இழப்பு என்றார்.
“எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் ஜாலியான டைப்,” என்று திரு குணசேகரனைப் பற்றி நினைவுகூர்ந்தார் காயத்ரி உணவகத்தின் உரிமையாளர் திரு சண்முகம் கணேசன், 58.
“சிறு வயது முதல் கடின உழைப்பால் உணவகத்தை வளர்த் தவர் அவர். 34 ஆண்டுகளாக அவரை அறிவேன். இறுதிக் காலம் வரையில் தமது தொழிலைப் பற்றியே சிந்தித்து வந்த அவர், பிள்ளைகளை நல்ல முறையில் வளர்த்துள்ளார். அவர்கள் இப்போது சிறப்பாகக் கடையை நடத்தி வருகின்றனர்,” என்று கூறினார் திரு சண்முகம்.