இம்மாத இறுதியில் இருந்து முதியோருக்கு கொவிட்-19 தடுப்பூசி
தடுப்பூசி நடவடிக்கைகளை அரசாங்கம் முடுக்கிவிட்டுள்ளதால் முன்னதாகவே, அதாவது இம்மாத இறுதியில் இருந்தே முதியவர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என்று கல்வி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்து உள்ளார்.
தடுப்பூசிக்கு முன்பதிவு செய்ய அவர்களுக்கு உதவி வழங்கப்படும் என்று திரு வோங் கூறினார்.
பிப்ரவரி மாதத்தில் இருந்து 70 வயது மற்றும் அதற்கும் மேற்பட்ட முதியவர்களுக்குத் தடுப்பூசி போடப்படும் என்று அரசாங்கம் முன்னதாக அறிவித்திருந்தது.
இந்நிலையில், “இம்மாத இறுதியில் இருந்து முதியவர்களுக்கான தடுப்பூசித் திட்டம் தொடங்கப்படும். முன்பதிவு முறை மூலமாக அருகிலுள்ள பலதுறை மருந்தகங்கள், பொதுச் சுகாதார ஆயத்தநிலை மருந்தகம் அல்லது தடுப்பூசி மையத்தில் அவர்களுக்குத் தடுப்பூசி போடப்படும்,” என்று கொரோனா தொற்றுக்கு எதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழுவின் இணைத் தலைவருமான திரு வோங் சொன்னார்.
குவாங் வாய் ஷியு மருத்துவமனையில் அமைச்சர் வோங் நேற்று ஃபைசர் - பயோஎன்டெக் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
முன்பதிவு முறை மூலம் தடுப்பூசிகள் வீணாவது தடுக்கப்படும். தடுப்பூசிகள் தயார்நிலையில் வைக்கப்பட்டு, பின் தடுப்பூசி போட எவரும் வரவில்லை எனில் அவை வீணாகிவிடும்.
எப்போது முதல் தடுப்பூசிக்கு முன்பதிவு செய்துகொள்ளலாம் எனும் தகவல் கடிதங்கள் மூலமாக முதியவர்களுக்குத் தெரிவிக்கப்படும் என்று திரு வோங் தெரிவித்தார்.
இணையம் வழியாக முன்பதிவு செய்ய முதியவர்களுக்கு உதவும் வகையில் தொண்டூழியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும். வீடமைப்பு வளர்ச்சிக் கழகப் பேட்டைகளில் வெவ்வேறு மொழிகளில் தகவல் பரப்பப்படும்.
முதியவர்களுக்கு தடுப்பூசி போட்ட பிறகு, மக்கள்தொகையின் மற்ற பிரிவினருக்கும் படிப்படியாகத் தடுப்பூசி வழங்கப்படும். அது கட்டம் கட்டமாகவும் தடுப்பூசி வந்துசேருவதைப் பொறுத்தும் இடம்பெறும் என்று அமைச்சர் வோங் கூறினார்.
“இப்போது முதல் தடுப்பூசி நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்க அளவு விரைவாக இடம்பெறும் என எதிர்பார்க்கிறோம். தங்களுக்குத் தடுப்பூசி கிடைக்கும்போது அதைப் போட்டுக்கொள்ளும்படி மீண்டும் ஒவ்வொருவரையும் ஊக்குவிக்கிறோம்,” என்றார் அவர்.