தங்களது முறை வரும்போது தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் பின்வாங்குவோருக்காக தடுப்பூசிகள் ஒதுக்கி வைக்கப்படாது என்று அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார். மாறாக, வரிசையில் அடுத்து இருப்பவருக்குத் தடுப்பூசிகள் போடப்படும்.
முடிந்த அளவிற்கு விரைவில் அனைவருக்கும் தடுப்பூசி போட்டுவிட வேண்டும் என்பதே சிங்கப்பூரின் இலக்கு என்று அமைச்சர் வோங் குறிப்பிட்டார்.
“தடுப்பூசி போட்டுக்கொள்ளாதது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம். பொறுத்திருந்து பார்க்க அவர் விரும்பினால் அதனுடைய விளைவை அவர் ஏற்றுக்கொண்டாக வேண்டும். பின்னர் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என அவர் நினைத்தால், அப்போது தடுப்பூசி விநியோகம் இல்லாமல் போகலாம்,” என்றார் திரு வோங்.
தேசிய அளவிலான தடுப்பூசி நடவடிக்கை நல்ல முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள், விமான, கடல்துறைப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.
திட்டமிட்டபடி எல்லாம் நடந்தால் சிங்கப்பூரர்கள், நீண்டகாலக் குடியிருப்பாளர்கள் அனைவருக்கும் 2021 மூன்றாம் காலாண்டிற்குள் போதுமான தடுப்பூசிகள் கிடைத்துவிடும் என்று திரு வோங் குறிப்பிட்டார்.