கழிவுப்பொருள் நிர்வாக ஊழியர்களுக்கான படிப்படியான சம்பள உயர்வு முறையை உருவாக்க புதிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
ஊழியர்களுக்கு இக்குழு பயிற்சிப் பாதை ஒன்றையும் நடைமுறைப்படுத்தும் என்று கூறப்பட்டது.
படிப்படியான சம்பள உயர்வு முறை மூலம் கழிவுப்பொருள் நிர்வாகத் துறையில் உள்ள குறைந்த ஊதிய ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதிலும் அவர்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதிலும் புதிய முத்தரப்புக் குழுமம் கவனம் செலுத்தும் என மனிதவள அமைச்சு நேற்று தெரிவித்தது.
இத்துறையில் படிப்படியான சம்பள உயர்வு முறையை அறிமுகப்படுத்தும் யோசனையை முதன்முதலில் தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் சென்ற ஆண்டு முன்வைத்தது.
இத்திட்டம் நிறைவேறினால், 3,000 உள்ளூர் ஊழியர்கள் இதன்வழி பலனடைவர் என்று கூறப்பட்டது. புதிதாக அமைக்கப்பட்ட குழுவில் என்டியுசி பிரதிநிதிகள், முதலாளிகள், தொழில்துறைச் சங்கங்கள், வாடிக்கையாளர்கள், அரசாங்க அதிகாரிகள் ஆகியோர் இடம்பெறுவர். இவ்வாண்டு பிற்பாதியில் குழு அதன் பரிந்துரைகளை வெளியிடும் என்று அமைச்சு கூறியது.
கழிவுப்பொருள் துறைக்கென வேலைப்பயிற்சிப் பாதைகள், பயிற்சி பெறுவதற்கான தகுதிகள், சம்பள அளவீடுகள் போன்றவற்றைக் குழு உருவாக்கும் என அமைச்சு விளக்கியது.
என்டியுசி செயல்பாடு மற்றும் அணிதிரட்டல் பிரிவின் இயக்குநர் ஃபாமி அலிமான், சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனத்தின் கௌரவத் துணைச் செயலாளர் ஃபிலிக்ஸ் லோ ஆகியோர் இக்குழுவுக்குத் தலைமை ஏற்றுள்ளனர்.
சம்பள உயர்வைத் திட்டமிடுவதால் இத்துறையில் உள்ள ஊழியர்களுக்கான வேலை முன்னேற்றப் பாதை தெளிவாக அமைந்திடும். சம்பளம் உயர வேண்டுமானால், ஊழியர்கள் தங்களின் திறன் மேம்பாட்டுக்காக ஏற்படுத்தப்பட்ட பயிற்சித்திட்டங்களுக்குச் செல்ல வேண்டும்.
தற்போது பாதுகாவல், துப்புரவு, நிலவனப்புத் துறைகளில் உள்ள சுமார் 80,000 ஊழியர்களுக்குப் படிப்படியான சம்பள உயர்வு முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அதையடுத்து இதேபோல் அமைக்கப்பட்ட குழு ஒன்று மின்தூக்கி, மின்படிகள் துறைக்கென செய்திருந்த பரிந்துரைகளை அரசாங்கம் 2018ஆம் ஆண்டில் ஏற்றுக்கொண்டது. இத்துறைக்கான படிப்படியான சம்பள உயர்வு முறை 2022ஆம் ஆண்டு முதல் நடப்புக்கு வருகிறது. இனி, ஐந்தாவது துறையாக கழிவுப்பொருள் நிர்வாகத்தில் உள்ள ஊழியர்களுக்கு இந்தச் சம்பள உயர்வு முறை விரிவாக்கம் காணலாம்.
படிப்படியான சம்பள உயர்வு முறை குறித்து செப்டம்பர் மாதம் பேசிய சுகாதார மூத்த துணை அமைச்சர் கோ போ கூன், அதை மேலும் விரைவாக விரிவுபடுத்தவும் அனைத்து துறைகளிலும் அமல்படுத்தவும் கேட்டுக்கொண்டார்.
அதையடுத்து இதர துறைகளுக்கும் இது விரிவுபடுத்தப்படும் என்று துணைப் பிரதமர் ஹெங் அக்டோபரில் தெரிவித்தார்.