செங்காங்-பொங்கோல் இலகு ரயில் சேவைக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மேலும் 17 புதிய ரயில்கள் சேவையில் சேர்க்கப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.
ஒவ்வொரு ரயிலிலும் இரண்டு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
வரும் 2024ஆம் ஆண்டிலிருந்து 2027ஆம் ஆண்டுக்குள் புதிய ரயில்கள் படிப்படியாக சேர்க்கப்படும் என்று இன்று அறிக்கை வாயிலாக ஆணையம் தெரிவித்தது.
தற்போது அந்த இரு தடங்களில் 33 ரயில்கள் இயக்கப்படுகின்றன.
புதிய ரயில்கள் சேவையில் சேர்க்கப்பட்டதும் மொத்த ரயில்களின் எண்ணிக்கை இரண்டு மடங்குக்கு அதிகரிக்கும் என்று இலகு ரயில் சேவையை நடத்தும் எஸ்பிஎஸ் டிரான்சிட் சொன்னது.
இந்த இலகு ரயில் கட்டமைப்பில் ஒரே ஒரு பெட்டி உள்ள 25 ரயில்களை எஸ்பிஎஸ் தற்போது இயக்கி வருகிறது. இந்த ரயில்கள், சிங்கப்பூரிலேயே அதிவேகத்தில் வளர்ச்சியடைந்து வரும் குடியிருப்புப் பேட்டைகளில் சேவையாற்றி வருகின்றன.
செங்காங்கில் தற்போது வட-கிழக்கு தடத்தில் மேலே அமைந்துள்ள இலகு ரயில் சேவைக்கான பணிமனையும் 3.5 ஹெக்டரிலிருந்து 11.1 ஹெக்டர் பரப்பளவுக்கு விரிவுபடுத்தப்படும் என்று ஆணையம் மேலும் தெரிவித்தது. புதிய ரயில்களை நிறுத்தி வைப்பதற்கான இடம், பராமரிப்பு மற்றும் பழுது பார்க்கும் இடம், ரயில் நேரத்தைக் குறைக்க உதவும் தடங்கள் போன்றவை பணிமனையில் இடம்பெற்று இருக்கும். பணிமனை விரிவாக்கத்தில் கூடுதலான ரயில் சேவைகளை சமாளிக்கும் வகையில் மின்சார விநியோகம் மேம்படுத்தப்பட்டிருக்கும் என்று ஆணையம் தெரிவித்தது.
இலகு ரயில் சேவை பணிமனைக்கான விரிவாக்கப்பணி இவ்வாண்டு இறுதியில் தொடங்கி 2027ஆம் ஆண்டில் நிறைவடையும்.
செங்காங் நகர மையம், செங்காங் எம்ஆர்டி நிலையம், பொங்கோல் பேருந்து நிலையம் போன்ற இடங்களுக்கு செங்காங்கில் தங்கியுள்ள மக்கள் எளிதாக சென்று வருவதற்கு ஏதுவாக 2003ல் செங்காங் இலகு ரயில் சேவை தொடங்கப்பட்டது.
பின்னர் பொங்கோல் பேருந்து நிலையங்கள் மற்றும் பொங்கோல் எம்ஆர்டி நிலையத்துடன் பொங்கோலில் வசிக்கும் குடியிருப்பாளர்களை இணைக்கும் வகையில் 2005ஆம் ஆண்டில் பொங்கோல் இலகு ரயில் சேவை இயக்கத் தொடங்கியது.
இந்த இரண்டு தடங்களிலும் 2016ல் ஒரு பெட்டியுள்ள ரயில்கள் மேம்படுத்தப்பட்டு இரண்டு பெட்டிகள் ரயில்கள் சேர்க்கப்பட்டன.