வாகனம் ஒன்று கடைவீட்டின் முற்பகுதியில் மோதியதில் ஐவர் பலியாகினர்.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படையின் தகவல்படி, தஞ்சோங் பகார் சாலையில் இன்று அதிகாலை (பிப்ரவரி 13ஆம் தேதி) 5.40 மணிக்கு நெருப்பு சம்பவம் குறித்து அழைப்பு வந்தது.
கடைவீட்டின் முற்பகுதியும் காரும் தீப்பற்றி எரிந்தது.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படையினர் 3 நீர் பாய்ச்சும் 'ஜெட்' சாதனங்களுடன் தீயை அணைத்தனர்.
சம்பவ இடத்திலேயே ஐவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
தீக்காயங்களுக்காக ஒருவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தகவல்படி, சம்பவம் நடந்தபோது 'பிஎம்டபிள்யு' காரில் இருந்த ஐவரும் மடிந்தனர் என நம்பப்படுகிறது. தீச் சம்பவம் ஏற்பட்டதன் தொடர்பில் விசாரணை தொடர்கிறது.
பலியானவர்களின் நண்பரான திரு அக்கிரா சான், ஒரு பெண்மணி காரில் இருந்தவர்களை காப்பாற்ற முயன்றதில் தீக்காயங்களுக்கு ஆளானதாக கூறினார்.
"அவர்கள் அந்நேரத்தில் உணவகத்தில் இருந்தனர். வீட்டுக்கு திரும்புவதாக இருந்த நிலையில் வாகனம் ஓட்டுநர் கட்டுப்பாட்டினை இழந்தார்.
வாகனத்தில் இருந்த என் நண்பரை காப்பாற்ற அவரை திருமண புரிவதாக இருந்த அப்பெண்மணி காரின் கதவை திறக்க முயன்றதில் தீக்காயங்களுக்கு ஆளானார்," என்று தெரிவித்தார் திரு அக்கிரா சான்.
அப்பெண்மணி 80% உடல் தீக்காயங்களுடன் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக அறியப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு பாதிப்படைந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் காலை 10.30 மணி அளவில் வந்து சேர்ந்தனர்.
சவக்கிடங்குக்கு கொண்டுச் செல்வதற்கு முன்னர் சடலங்களை குடும்ப உறுப்பினர்கள் அடையாளம் கண்டனர்.
முதல்கட்ட விசாரணையின்படி, வாகனத்தை ஓட்டியவர் 29 வயது ஆடவரென்றும் அதில் 20 வயதிற்கும் மேற்பட்ட நான்கு ஆண் பயணிகளும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
வாகனத்தை ஓட்டியவரின் பெயர் ஜொனத்தன் லொங் என்றும் அவருடன் பயணித்தவர்களின் பெயர்கள் கேரி வொங் கொங் சியே, 29, இயுஜின் யப், 29, எல்வின் டான் யொங் ஹாவ்,28, டியோ சீ சியாங், 26, என்றும் நம்பப்படுகிறது.
போலிஸ் கொடுத்த முதல்கட்ட விசாரணை அறிக்கையின்படி, கார் ஓட்டுநர் அதிவேகமாக அச்சாலையில் காரை ஓட்டிச்சென்றதாக நம்பப்படுவதாகவும் அக்கார் கடைவீட்டின் மீது மோதி வாகனம் தீ பிடித்துக்கொண்டது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.