பெட்டாலிங் ஜெயா: தேசிய கொவிட்-19 தடுப்பூசித் திட்ட வழிகாட்டியை மலேசியப் பிரதமர் முகைதீன் யாசின் நாளை அறிமுகப்படுத்துகிறார்.
மலேசியாவில் கொவிட்-19 தடுப்பூசித் திட்டம் இம்மாதம் தொடங்குகிறது. தடுப்பூசி மருந்து வாங்கும் உத்தி, தடுப்பூசி போடுவதை நடைமுறைப்படுத்துவது போன்றவை தொடர்பான விவரங்கள் அதில் இடம்பெறும்.
இந்நிலையில், தேசிய கொவிட்-19 தடுப்பூசித் திட்டத்தை ஆதரிக்குமாறு மலேசியாவின் அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுதீன் மலேசியர்களைக் கேட்டுக்கொண்டார்.
தடுப்பூசி பற்றி பரவி வரும் பொய்ச் செய்திகளை நம்ப வேண்டாம் என்று அவர் கூறினார். அதுமட்டுமல்லாது, கொவிட்-19 தடுப்பூசி பாதுகாப்பானது என்று அவர் உறுதி அளித்தார்.
தடுப்பூசி பற்றி வலம் வரும் பல வதந்திகளில் துளியளவும் உண்மையில்லை என்றார் அவர். அறிவியலைக் கொண்டு தடுப்பூசி தயாரிக்கப்பட்டதாக அவர் கூறினார்.