தன்னலம் பாராமல் யாரோ ஒருவர் கொடையாகக் கொடுத்த கல்லீரல் கைக்குழந்தை ஒன்றை வாழ வைத்து வருகிறது.
ரேனால் என்ற அந்தப் பெண் குழந்தை பிறந்து 45 நாட்கள் ஆன நிலையில் அதன் கல்லீரல் சரிஇல்லை என்பது தெரியவந்தது.
கல்லீரல் சுரக்கும் பித்தநீரை பித்தப் பைக்குக் கொண்டு செல்லும் நாளம் அழன்று இருந்தது.
அதனால் பித்தநீர், பித்தப் பைக்குச் செல்வது தடைபட்டது. இதனால் கல்லீரல் செயல் இழந்து விடக்கூடிய ஆபத்து இருந்தது.
அந்தக் குழந்தைக்குச் சென்ற செப்டம்பரில் 17 மாத வயதான போது குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், கல்லீரலை மாற்றினாலொழிய குழந்தை ஆறு மாதத்துக்கு மேல் உயிர்வாழ முடியாது என்று சொல்லிவிட்டார்கள்.
அந்தக் கைக்குழந்தையின் தந்தை திரு ரோகர் வோங்கின் கல்லீரல் குழந்தைக்குப் பொருந்தவில்லை. குழந்தையின் தாயாரான திருவாட்டி விக்கி செங் அப்போது கர்ப்பிணியாக இருந்தார்.
இதனால் அந்தப் பெற்றோர் ஃபேஸ்புக்கில் அவசர வேண்டுகோள் விடுத்தனர். மூன்று மாதம் கழித்து ஜனவரி 6ஆம் தேதி சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை யாரோ ஒருவர் கொடையாக வழங்கிய கல்லீரல் அந்தக் குழந்தைக்குப் பொருத்தமாக இருப்பதைக் கண்டறிந்தது.
தொடர்ந்து ஜனவரி 20ஆம் தேதி குழந்தை ரேனாலுக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது.
அதற்கு இரண்டு வாரம் கழித்து அந்தக் குழந்தை பொதுப் பிரிவிற்கு மாற்றப்பட்டு இப்போது அங்கே கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தங்களுடைய நிலைமையைப் பற்றி ஃபேஸ்புக்கில் பலவற்றையும் தெரிவித்து திரு ரோகர் தம்பதி வேண்டுகோள் விடுத்ததை அடுத்து $100,000 கொடை திரண்டது.
அது கல்லீரல் பொருத்தமானதுதானா என்பதைக் கண்டறிய நடத்தப்பட்ட பரிசோதனைக்கு ஆன செலவை ஈடுசெய்தது.
இதனிடையே, அன்றாடம் மருத்துவமனைக்குப் பெற்றோர் சென்று வர வேண்டிய நிலைமையை அறிந்த ‘ரோனால்ட் மெக்டோனல்ட் ஹவுஸ் சேரிட்டிஸ்’ என்ற அறப்பணி அமைப்பு அந்த மருத்துவமனையிலேயே அத்தம்பதியர் தங்க ஓர் இடத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.
கல்லீரல் கொடை கொடுத்த வள்ளலுக்கும் மருத்துவமனை ஊழியர்களுக்கும் இதர பல வழிகளில் பல்வேறு உதவிகளைச் செய்த எல்லாருக்கும் இத்தம்பதியர் தங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரவித்துக்கொண்டனர்.
நிதி அளவிலும் மனதளவிலும் இதர வழிகளிலும் இந்த அளவுக்கு ஆதரவையும் அன்பையும் உதவியையும் பெற தாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.