நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததாக அறிவித்ததை அடுத்து, புதுவை முதல்வர் நாராயணசாமி தனது பதவியில் இருந்து விலகினார்.
புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்த நிலையில், முதல்வர் நாராயணசாமி சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார்.
அடுத்தடுத்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அறுவர் தொடர்ந்து பதவி விலகியதால் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங் கிரஸ் கூட்டணி அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது.
இந்நிலையில், தொடர்ந்து பலம் இழந்து வரும் ஆளுங்கட்சி தங்க ளது பெரும்பான்மையைப் பேரவை யில் நிரூபிக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவா் என்.ரங்க சாமி, துணைநிலை ஆளுநராகக் கூடுதல் பொறுப்பேற்ற தமிழிசை சௌந்தராஜனிடம் மனு அளித்தார்.
இதையடுத்து, முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசைப் பேரவையில் தங்களது பெரும்பான்மையை நிரூபிக்கும்படி தமிழிசை உத்தரவிட்டார்.
அதன்படி, புதுச்சேரி பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்புக் கோரும் தீர்மானத்தைக் கொண்டு வந்து பேசிய நாராயணசாமி, மத்திய பாஜக அரசையும் புதுச்சேரி எதிர்க்கட்சிகளையும் கடுமையாக சாடும் வகையில் பேசினார்.
இதன் பின்னர், நம்பிக்கை வாக்கெடுப்புக் கோரும் தீர்மானம் மீது வாக்களிக்காமல் காங்கிரஸ், திமுக எம்எல்ஏக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்புக் கோரும் தீர்மானம் தோல்வியடைந்ததாக சபாநாயகர் அறிவித்தார். இதனால், புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான அரசு கவிழ்ந்தது.
இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் என்.ரங்கசாமி செய்தி யாளர்களிடம் , “புதுச்சேரி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பில் நாராயணசாமி அரசு படுதோல்வி அடைந்துவிட்டது,” என்றார்.
இதற்கிடையே, ஆளுநர் மாளிகைக்குச் சென்ற நாராயணசாமி, அங்கு தமிழிசையைச் சந்தித்து தனது அமைச்சரவை கூண்டோடு பதவி விலகுவதாக கடிதம் தந்தார்.
தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த நாராயணசாமி, “புதுச்சேரி அமைச்சரவையில் உள்ள அனைவரும் பதவி விலகியுள்ளோம். இனி முடிவு எடுக்க வேண்டியது ஆளுநரின் கையில்தான் உள்ளது.
“என்ஆர் காங்கிரஸ், அதிமுக, பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். நியமன எம்எல்ஏக்கள் மூலம் ஆட்சிக் கவிழ்ப்பு செய்த எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் தண்டனை கொடுப்பார்கள்,” என்றார்.