தஞ்சோங் பகார் விபத்தில் சிக்கிய காதலனைக் காப்பாற்ற முயற்சி செய்ததால் தீக்காயமடைந்த மாது தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து பொது சிகிச்சைப் பிரிவுக்கு மாறி இருப்பதாகவும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் சிங்கப்பூர் பொது மருத்துவமனை இன்று (பிப்ரவரி 23) தெரிவித்தது.
திருவாட்டி ரேபி ஓ சியூ ஹுவே, 26, தற்போது உயர் சார்பு சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும் சுய நினைவுடன் இருப்பதாகவும் மருத்துவமனை தெரிவித்தது. விபத்து நிகழ்ந்த பிப்ரவரி 13ஆம் தேதி முதல் முதல் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் திருவாட்டி ஓவுடன் அவரது குடும்பத்தார் இருக்கின்றனர்.
திருவாட்டி ஓவின் காதலர் ஜொனாத்தன் லோங் ஓட்டிச் சென்ற பிஎம்டபள்யூ கார் அதிகாலை 5.40 மணியளவில் தஞ்சோங் பகாரில் உள்ள கடைவீடு ஒன்றின் மீது மோதியது. அந்த கார் வெடித்து தீப்பற்றியதில் காரில் பயணம் செய்த நால்வரும் உயிரிழந்தனர்.
காதலனைக் காப்பாற்றும் முயற்சியில் உடலில் தீப்பற்றிக்கொண்ட திருவாட்டி ஓ, 80% தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.