தமிழ்த் திரையுலகில் மீண்டும் ஒரு வேலைநிறுத்த அறிவிப்பு வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப்புள்ளிகள்.
இந்த ஆபத்தைத் தவிர்க்க வேண்டுமென்றால், திரையுலகம் சார்ந்த அனைத்து சங்கங்களின் பிரதிநிதிகளும் அமர்ந்து பேசி பிரச்சினைகளைத் தீர்க்கவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
திரைப்படங்களை நேரடியாக வெளியிடுவதுதான் தற்போது சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. திரையரங்க உரிமையாளர்கள் இதற்கு கடும் எதிரிப்புத் தெரிவித்து வருகிறார்கள்.
கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் மீண்டும் திரையரங்குகள் இயங்கத் தொடங்கி உள்ளன. மேலும், திரையரங்கில் உள்ள அனைத்து இருக்கைகளையும் நிரப்பு வதற்கும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இது திரையுலகத்தினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய போதிலும் அடுத்தடுத்த சிக்கல்கள் உருவாகி உள்ளது.
கொரோனா ஊரடங்கின்போது சில படங்கள் 'ஓடிடி' எனப்படும் நேரடியாக இணையத்தில் வெளியிடும் ஏற்பாட்டின்படி வெளியாகின. இதற்கான முதல் அடியை எடுத்து வைத்தவர் நடிகர் சூர்யா. அவர் நடித்த 'சூரரைப் போற்று' திரைப்படம் இணையத்தில் வெளியாகி நல்ல வசூலைத் தந்தது. இதனால் மேலும் பல தயாரிப்பாளர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் ஓடிடியில் திரைப்படங்களை வெளியிட்டனர்.
ஏற்கெனவே படமாக்கப்பட்டு பல பிரச்சினைகளால் முடங்கிக் கிடந்த படங்கள், குறைந்த செலவில் எடுக்கப்பட்ட படங்கள், புதுமுகங்கள் நடித்த படங்கள் ஆகியவற்றை வெளியிடவும் 'ஓடிடி' தளங்கள் கைகொடுத்தன. இதனால் இளம் படைப்பாளிகளின் பார்வை 'ஓடிடி' பக்கம் திரும்பியுள்ளது. அதாவது ஒரு படத்தை திரையரங்கில் மட்டுமல்லாமல், சூட்டோடு சூடாக இணையத்திலும் வெளியிட வேண்டும் என விரும்பு கிறார்கள். இதுதான் திரையரங்க உரிமையாளர் களுக்குச் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
திரையரங்குகளில் படத்தை வெளியிட்ட 30 நாட்களுக்குள் இணையத்திலும் ஒரு படத்தை வெளியிட்டால் அது தங்களது வருமானத்தைப் பாதிக்கும் என்பது திரையரங்க உரிமையாளர்களின் புகார். எனவே, எந்தவொரு படத்தையும் திரையரங்குகளில் வெளியிடும் முன்பு, அப்படம் வெளியான 30 நாட்களுக்கு 'ஓடிடி'யில் வெளியிட மாட்டோம் என்று தயாரிப்பாளர்கள் கடிதம் கொடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், தயாரிப்பாளர்கள் தரப்பில் இதற்கு எதிர்ப்புக் கிளம்பி உள்ளது.
அண்மையில் விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் பல மாத காத்திருப்புக்குப் பின்னர் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வசூலைக் கண்டது. எனினும் திரையரங்குகள் தரப்பில் காட்டப்பட்ட வசூல் கணக்கால் பிரச்சினை வெடித்தது.
திரையரங்குகளில் 50 விழுக்காடு இருக்கைகளை மட்டுமே நிரப்பலாம் எனும் விதிமுறை அமலில் இருந்தபோது 'மாஸ்டர்' வெளியீடு கண்டது. ஆனால் பல இடங்களில் அதற்கும் மேலான இருக்கைகள் நிரப்பப்பட்டதாகவும் கூடுதல் விலைக்கு டிக்கெட்டுகள் விற்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இதனால் உண்மையான வசூல் நிலவரத்தை திரையரங்குகள் தரப்பில் முன்வைக்கவில்லை என்பது தயாரிப்புத் தரப்பின் குற்றச்சாட்டாக இருந்தது.
இந்நிலையில், தயாரிப்பாளர்களும் திரையங்க உரிமையாளர்களும் அண்மையில் சந்தித்துப் பேசினர். எனினும் சுமூக உடன்பாடு எட்டப்படவில்லை. மார்ச் 31ஆம் தேதிக்குள் தங்களது கோரிக்கைகளையும் நிபந்தனைகளையும் தயாரிப்பாளர்கள் ஏற்கவேண்டும் என திரையரங்க உரிமையாளர்கள் கெடு விதித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அதற்குள் சுமூக முடிவு எட்டப்படவில்லை என்றால் திரையரங்குகளில் புதுப்படங்களை வெளியிடுவதில் சிக்கல் ஏற்படும். திரையரங்க உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இதனால் மற்ற திரையுலகச் சங்கங்களும் போராட்டம், வேலை நிறுத்தம் என அழைப்பு விடுக்கக் கூடும். இதனால் தமிழ் திரையுலகத் தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.