துப்புரவு, பாதுகாவல், நிலவனப்பு பராமரிப்பு ஊழியர்களுக்கு முறையான பணியிட சூழல் உருவாக்கித் தரப்பட வேண்டும். இவர்கள் வெளிப்புற பணியிடங்களுக்கு அனுப்பப்படும்போது அவர்கள் ஓய்வுபெற தகுந்த ஏற்பாடுகள் செய்துதர சம்பந்தப்பட்ட கட்டட உரிமையாளர்களை நிர்ப்பந்திக்கும் சட்டங்கள் வரையப்பட வேண்டும் என நியமன நாடாளுமன்ற உறுப்பினர் ராஜ் ஜோஷுவா தாமஸ் வலியுறுத்தியுள்ளார்.
இவ்வாறு செய்வதன் மூலம் இந்தத் துறைகளில் நீண்டகாலமாக இருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண இவர்களின் பணியை நாடுவோரை கட்டாயப்படுத்தும் என்று சிங்கப்பூர் பாதுகாவலர் சங்கத்தின் தலைவருமான திரு ராஜ் ஜோஷுவா தாமஸ் கூறினார்.
வரவுசெலவு திட்ட உரையின் இரண்டாம் நாளான இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், இத்தகைய ஊழியர்களின் சேவையைப் பெறுவோர் வேலையிட சூழல் தொடர்பாக நான்கு அம்சங்களை மேம்படுத்தலாம் என்றார்.
முதலாவதாக, இந்த ஊழியர்கள் வேலை பார்க்கும் இடங்களில் நல்ல காற்றோட்டம் இருக்க வேண்டும்.
“இதற்கு உதாரணமாக, சூரிய வெப்பத்தில் உயரமான பகுதிகளில் எவ்வித பாதுகாப்பு அம்சமும் இல்லாத இடங்களில் அவர்கள் நீண்ட நேரம் வேலை செய்யக்கூடாது,” என திரு ராஜ் விளக்கினார்.
அடுத்ததாக, வெளிப்புற பணிகளுக்கு அனுப்பப்படும் ஊழியர்கள் முறையாக ஓய்வு பெற வசதிகள் செய்து தருவது தொடர்பான சட்டம் விரைவிலேயே அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் சொன்னார்.
தற்போதைய நிலையில் கட்டட ஊழியர்களுக்கு தகுந்த ஓய்வு வசதி ஏற்படுத்தித் தர ஊக்குவிக்கப்படுகின்றனர் அவ்வளவுதான் என்று அவர் தெரிவித்தார்.
மூன்றாவதாக, வெளிப்புற பணிகளுக்கு அனுப்பப்படும் ஊழியர்களுக்கு முறையான ஓய்வுநேரம் வழங்கப்பட்டு அவர்களின் பணி படிப்படியாக சம்பள உயர்வு பெறும் வகையில் அமைந்திட வேண்டும் என திரு ராஜ் கூறினார். இதில் தற்போது பல பாதுகாவலர்கள் 12 மணிநேர வேலை பார்க்கின்றனர் என்ற அவர், அவர்களுக்கு 8லிருந்து 10 மணிநேரம் வேலை பார்ப்பதே நியாயமாக இருக்கும் என்றார்.
இறுதியாக, வெளிப்புற பணிகளுக்காக அனுப்பப்படும் ஊழியர்கள் அவர்கள் பயிற்சி பெற்ற பணிகளில் மட்டுமே ஈடுபடுத்தப்பட வேண்டும் என்று திரு ராஜ் தெளிவுபடுத்தினார். இதில் பல சந்தர்ப்பங்களில் இவர்கள் சாதாரண ஊழியர்கள் போல் பயன்படுத்தப்படுவதாக அவர் விளக்கினார். அதற்கு உதாரணமாக, துப்புரவுத் தொழிலாளர்கள் மின்சாரம் தொடர்பான பணிகளில் ஈடுபடுத்தப்படுவதை திரு ராஜ் சுட்டினார்.
இந்த ஊழியர்களின் பணியிட சூழல் தொடர்பில் இவர்களின் சேவையைப் பெறுவோருக்கு அறிவுரை வழங்க முத்தரப்பு அமைப்பு ஒன்றை உருவாக்கலாம் என திரு ராஜ் யோசனை தெரிவித்தார்.