கோவை: அரசு விழா, பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக கடந்த 25ஆம் தேதி வியாழனன்று பிரதமர் நரேந்திர மோடி கோயம்புத்தூர் வந்தார்.
இந்த வருகையின்போது, பாஜக தலைவர்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள், ஆட்சியாளர்கள் என முக்கிய பெரும்புள்ளிகளை மட்டும் சந்தித்துவிட்டு டெல்லிக்குத் திரும்பி விடவில்லை பிரதமர் மோடி.
மாறாக, அண்மையில் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதைப் பெற்ற பாப்பம்மாள் பாட்டியையும் நேரில் சந்தித்தார் பிரதமர் மோடி.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகேயுள்ள தேக்கம் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாப்பம்மாள், 105.
சுருங்கிய தோலும் நரைமுடியுமாகக் காட்சி தரும் பாப்பம்மாள் பாட்டி, சிறு வயது முதலே விவசாயத்தில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்நிலையில், பிரதமர் மோடி யைச் சந்திக்க தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெறும் கோவை கொடிசியா அரங்குக்கு வந்திருந்தார். அங்கு மூதாட்டி பாப்பம்மாளைச் சந்தித்த மோடி, அவரை கைகூப்பி வணங்கினார்.
பாப்பம்மாளும் பிரதமர் மோடியை வணங்கி அவர் நீண்டநாள் வாழ வேண்டும் என்று வாழ்த்தினார்.
இயற்கை விவசாயம் குறித்து பாப்பம்மாளிடம் கேட்டுத் தெரிந்துகொண்ட பிரதமர் மோடி, இதனை தனது இன்ஸ்டகிராமிலும் பதிவு செய்துள்ளார்.
"கோவையில் இயற்கை விவசாயத்தில் தீவிர ஈடுபாடு காட்டி வரும் பாப்பம்மாளைச் சந்தித்தது மறக்கமுடியாதது," என்று அந்தப் பதிவில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இருவரும் கைகூப்பி வணங்கும் புகைப்படத்தையும் பிரதமர் தனது ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.
கடந்த 30 ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்து ஆரோக்கியமான உணவுப் பொருட் களை உற்பத்தி செய்து, அதை உண்டு ஆரோக்கியத்துடன் வாழும் பாப்பம்மாள் பாட்டிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி அண்மையில் கௌரவித்திருந்தது மத்திய அரசு.