இரா சத்திக்கண்ணன்
அவர் காலையில் மூன்று மணிக்கெல்லாம் எழுந்து குளித்துவிட்டு, நாலுமுழ வேட்டியை அணிந்துகொண்டு மந்திரங்களை முணுமுணுத்தவாறே ஒரு மணிநேரத்தில் கிட்டத்தட்ட ஒரு பித்தளை வாளி நிறைய வடைகள் சுட்டு அடுக்கிவிடுவார்.
ஒவ்வொரு வடையும் எண்ணெய்யில் கொதித்தாலும் அவரின் மந்திரமுனகலில் மகிழும். கோல்டன் பிரௌன் கலரில் மினுக்கும்.
வடையை அதிகாலையிலேயே தன் செல்லப்பிள்ளை கடவுளான பாலகிருஷ்ணனுக்குப் படைத்திடுவார்.
அவருக்குத்தெரியாது கடவுள் பாலகிருஷ்ணன் இரண்டு மணியிலிருந்து அவரின் வடைக்காக காத்திருந்தது.அவருக்கென்று வாடிக்கையாளர்கள் உண்டு. சொல்லப்போனால் அவர்கள் அவரின் விசிறிகள். 'வடை மாமா' என்றே அழைப்பார்கள் அவரை.
காலை ஐந்து மணிக்கெல்லாம் அருகிலிருக்கும் மணியாச்சி ரயில் நிலையத்தில் வடை வாளியுடன் ஆஜராகி விடுவார்.
முதல் வண்டி காலை ஐந்து பதினைந்துக்கெல்லாம் வந்துவிடும்.
சில வாடிக்கையாளர்கள் மாதக்கணக்கிலும், சிலர் வாரக்கணக்கிலும் கணக்கு வைத்துக்கொண்டு அவரிடம் வடைகள் வாங்கி உண்பார்கள். அவரோ வாடிக்கையாளர்கள் உண்டு மகிழ்வதை ரசிப்பார். கணக்கு வைத்துக்கொள்ளும் பழக்கம் இல்லாதவர். வடைக்குக் காசு கேட்டு பழக்கமில்லாதவர். வாடிக்கையாளர்கள் எப்போது பணம் கொடுக்கிறார்களோ அப்போது வாங்கிக்கொள்வார்.
எல்லா வடைகளும் காலை ஏழுமணிக்கே விற்றுத்தீர்ந்துவிடும்.
பின்னர் காலை முழுதும் தனக்குத் தெரிந்த அறிவியல் மற்றும் கணிதப்பாடங்களை ஆரம்பப் பாடசாலை குழந்தைகளுக்குச் சொல்லித்தருவார். கடவுள் பாலகிருஷ்ணனும் அவரின் மாணாக்கர்தான். கல்விதான் முக்கியம் என்பதை ஆழமாகப் போதிப்பார்.
இன்று காலை ஐந்து மணியாகிவிட்டது.
கடவுள் பாலகிருஷ்ணன் முதல் நட்சத்திரங்கள் வரை மற்றும் கிட்டத்தட்ட ஆறுமாதகாலம் ஓடாத ரயிலும் அவரின் வீட்டுவாசலில் காத்திருக்கிறார்கள்.
அவர் இன்னும் உறங்கிக்கொண்டிருக்கிறார்.
கொரானாவிற்குத் தெரியுமா வடை மாமாவின் ஆனந்த வாழ்க்கை பற்றி.