அரசாங்கத்திடம் ரொக்க உபரி இருப்பதால் பொருள், சேவை வரியை (ஜிஎஸ்டி) உயர்த்த தேவையில்லை என அண்மையில் பாட்டாளிக் கட்சி ஃபேஸ்புக்கில் வெளியிட்ட பதிவு ஒன்று தவறானது, வாசகர்களைத் தவறாக வழிநடத்தக்கூடியது என்று நிதி இரண்டாம் அமைச்சர் இந்திராணி ராஜா இன்று (ஏப்ரல் 5) நாடாளுமன்றத்தில் கூறினார்.
அரசாங்கத்தின் ரொக்க உபரியில் பெரும்பகுதி நில விற்பனை மூலம் கிடைப்பதாக அவர் சொன்னார்.
“நில விற்பனை மூலம் கிடைக்கும் இத்தகைய ரொக்கம் அரசாங்கத்திற்கு கூடுதல் வருவாயைத் தராது. எனவே, ஜிஎஸ்டி உயர்வைத் தள்ளிவைக்க இது முறையான காரணம் இல்லை,” என்று அமைச்சர் இந்திராணி விவரித்தார்.
நில விற்பனை மூலம் கிடைக்கும் தொகை அரசாங்க வருவாயின் ஒரு பகுதியாக கருதப்படாது என்றும் செலவினத்திற்கு அதை நேரடியாகப் பயன்படுத்த முடியாது என்றும் அவர் கூறினார்.
மாறாக, அந்தத் தொகை முதலீடு செய்யப்படுகிறது. அந்த முதலீடு மூலம் கிடைக்கும் வருமானத்தின் ஒரு பகுதி சிங்கப்பூரர்களின் செலவினத் தேவைக்கு ஆதரவளிக்க பயன்படுத்தப்படுகிறது.
மார்ச் 19ஆம் தேதி பாட்டாளிக் கட்சி வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவுக்குப் பதிலளிக்கும் விதமாக அமைச்சர் இந்திராணி மேற்கண்ட கருத்தை நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.