கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்வு; அலுவலகங்களுக்கு அதிகமான ஊழியர்கள் திரும்ப அனுமதி
சிங்கப்பூரில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்பட்டு, நேற்று முதல் 75% ஊழியர்கள் அலுவலகம் திரும்ப அனுமதிக்கப்பட்டனர். என்றாலும் எம்ஆர்டி ரயில்களில் குறிப்பிடும்படியாக அதிகக் கூட்டம் தென்படவில்லை.
ராஃபிள்ஸ் எம்ஆர்டி நிலையத்தில் நேற்றுக் காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை பயணிகள் நெருக்கமாக அருகருகே செல்வதைக் காண முடிந்தது. முகக்கவசம் மட்டும் இல்லையெனில் கொவிட்-19 நினைவே வந்து இருக்காது போன்ற சூழல் காணப்பட்டது.
எந்த வேறுபாடும் தெரியவில்லை என்று அந்த ரயில் நிலையத்திற்கு அருகே வேலை பார்க்கும் பாதுகாவல் ஊழியர் ஒருவர் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.
மத்திய வணிக வட்டாரத்தின் மையமான மரினா பே நிதி மையத்தில் உச்ச நேரத்தில்கூட ரயில்களின் இருக்கைகள் காலியாக இருந்தன.
"எல்லாம் வழக்கமாக இருப்பதாகவே தெரிந்தது. தெம்பனிசில் ரயிலில் ஏறினேன். அமர இடம் கிடைத்தது," என்று வணிகப் பகுப்பாய்வாளரான திருவாட்டி சுஷ்மா பிள்ளை, 40, என்பவர் கூறினார்.
வேலை இட நிபந்தனைகள் தளர்த்தப்படுவது பற்றிய விவரங்கள் சென்ற வாரம் அறிவிக்கப்பட்டன. வீட்டில் இருந்து வேலை பார்ப்பதை நிரந்தரமானதாக ஆக்காமல் அப்படியும் இப்படியுமாக வேலை ஏற்பாட்டை முதலாளிகள் செய்துகொள்ள அரசு அனுமதித்துள்ளது.
ஊழியர்களைக் குழுக்களாகப் பிரித்து வேலையில் அமர்த்துவது; வேலை நேரத்தை மாற்றி அமைப்பது; வாரத்தில் குறிப்பிட்ட நாட்களுக்கு வீட்டில் இருந்து வேலை பார்க்க அனுமதிப்பது ஆகியவை காரணமாக பொதுப் போக்குவரத்தில் நெரிசல் அதிகரிப்பு மிதமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீக்குப்போக்கான வேலை நேர ஏற்பாடு தொடரும் என்று பல முதலாளிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தின் போக்குவரத்துத் துறை வல்லுநர் வால்டர் தெசேரா, ரயில்களில் கூட்டம் கொவிட்-19க்கு முன்பு இருந்த நிலைக்குத் திரும்புமா என்பதைக் கணிப்பது சிரமமானது என்று தெரிவித்தார்.