சிங்கப்பூரில் நேற்று நண்பகல் நிலவரப்படி புதிதாக 14 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அவர்களையும் சேர்த்து கொரோனா கிருமித்தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 60,692 ஆகக் கூடியது. புதிதாக கிருமி தொற்றிய அனைவருமே வெளி நாடுகளில் இருந்து வந்தவர்கள்.
தனிமையில் இருக்க வேண்டும் என்று அவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
சமூகத்திலும் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளிலும் புதிதாக நேற்று யாருக்கும் தொற்று இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. திங்கட்கிழமை புதிதாக கொவிட்-19 தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 25 ஆக இருந்தது. அவர்கள் அனைவருமே வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். தனிமையில் இருக்க வேண்டும் என அவர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
அவர்களில் ஒருவர், கனடாவில் இருந்து இங்கு திரும்பி வந்த 72 வயது மாது. அந்த மாதுக்கும் இதர நான்கு பேருக்கும் தொற்று அறிகுறிகள் காணப்பட்டதாக அமைச்சு திங்கட்கிழமை கூறியது.
திங்கட்கிழமை தொற்று கண்டுபிடிக்கப்பட்டவர்களில், அந்த 72 வயது மாது உட்பட ஐந்து பேர் சிங்கப்பூரர்கள். கனடா, இந்தியா, இந்தோனீசியா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் இருந்து அவர்கள் வந்தனர்.
பங்ளாதேஷ், இந்தியா, நேப்பாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த நான்கு வேலை அனுமதி ஊழியர்களும் பங்ளாதேஷ், இந்தியா, பிலிப்பீன்ஸ் நாடுகளைச் சேர்ந்த வேலை அனுமதிச் சீட்டு ஊழியர்கள் 11 பேருக்கும் தொற்று இருந்தது தெரியவந்தது.
இந்தியா, அமெரிக்காவில் இருந்து குறுகிய கால விசாவில் வந்த மூன்று பேரும் அவர்களில் அடங்குவர். இதனிடையே, சமூகத்தில் புதிய தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து நிலையாக இருந்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
கடந்த இரண்டு வார காலமாகவே அந்த எண்ணிக்கை வாரத்திற்கு இரண்டு என்ற முறையில் இருந்து வருகிறது.
சமூகத்தில் ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாத தொற்றுகளின் எண்ணிக்கையும் கடந்த இரண்டு வாரமாக வாரத்திற்கு இரண்டு என்ற முறையில் நிலையாக இருந்து வருகிறது.
கொவிட்-19 தடுப்பூசி இயக்கம் சிங்கப்பூரில் சரளமாக நடந்து வருகிறது. படிப்படியாக பலருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
வெளிநாட்டு ஊழியர் தங்கு விடுதியிலும் தடுப்பூசி இயக்கம் இடம்பெற்று வருகிறது.
இவ்வேளையில், திங்கட்கிழமை 22 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். அவர்களையும் சேர்த்து மொத்தம் 60,342 பேர் முற்றிலும் குணமடைந்து இருக்கிறார்கள்.
மருத்துவமனையில் இன்னமும் 56 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒருவர் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார். சமூக நல்வாழ்வு நிலையங்களில் 235 பேர் தேறி வருகிறார்கள்.
கொவிட்-19 காரணமாக சிங்கப்பூரில் 30 பேர் மரணமடைந்துவிட்டனர். அந்தத் தொற்று இருந்தும் இதர காரணங்களால் மாண்டவர்களின் எண்ணிக்கை 15 என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.