தடுப்பூசி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என இந்தியப் பிரதமர் மோடி வலியுறுத்து
கொவிட்-19 இரண்டாவது அலை நாட்டை உலுக்கி வருவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இதனால் மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறும் சாத்தியமுள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கும்படியும் பிரதமர் மோடி வலியுறுத்தி இருக்கிறார்.
இந்தியாவில் புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 349,691 பேரை கொரோனா தொற்றியது; 2,767 பேர் மாண்டுவிட்டனர்.
இந்நிலையில், வானொலி மூலம் 'மனதின் குரல்' நிகழ்ச்சி வழியாக நேற்று நாட்டு மக்களிடம் உரையாற்றிய திரு மோடி, "கொரோனா முதல் அலையை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியதால் நம்பிக்கையும் மனஉறுதியும் மிக்கவர்களாக இருந்தோம். ஆனால், கொரோனா இரண்டாவது அலை நாட்டை உலுக்கி வருகிறது," என்று கூறினார்.
அனைத்து மாநிலங்களுக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், தடுப்பூசி குறித்த வதந்திகளுக்குப் பொதுமக்கள் இரையாகிவிட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதனிடையே, தலைநகர் டெல்லியில் கொரோனாவின் வெறி ஆட்டம் இன்னும் தணியாததால் இன்று காலை அறிவிக்கப்பட்டு இருந்த முழு ஊரடங்கு அடுத்த மாதம் 3ஆம் தேதிவரைக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் கொரோனா பரிசோதனை செய்துகொள்வோரில் 36% முதல் 37% வரை அதனால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிசெய்யப்படுகிறது என்றும் இதற்குமுன் இத்தகைய நிலை இருந்ததில்லை என்றும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று தெரிவித்தார்.
இருப்பினும், சென்ற வாரம் அங்கு 28,000க்கும் மேலாக இருந்த அன்றாட பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 24,000ஆகக் குறைந்தது. பாதிப்பு அதிகமாக இருப்பதால் டெல்லி மருத்துவமனைகளில் படுக்கைகள், மருந்துப் பொருள்கள் மற்றும் ஆக்சிஜனுக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக என்டிடிவி செய்தி கூறுகிறது.
டெல்லிக்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை மத்திய அரசு 480 டன்னில் இருந்து 490 டன்னாக உயர்த்தி இருக்கிறது. ஆனால், "எங்களுக்கு 700 டன் ஆக்சிஜன் தேவைப்படும் நிலையில் 330-335 டன் ஆக்சிஜனே வந்து சேர்கிறது," என்று கெஜ்ரிவால் தெரிவித்து இருக்கிறார்.
அமெரிக்கா ஆதரவுக்கரம்
இதனிடையே, இந்தியாவில் கொரோனா பரவல் மோசமடைந்து வருவதை எண்ணி கவலைஅடைந்துள்ளதாகக் கூறியுள்ள அமெரிக்கா, அந்நாட்டு அரசுக்கும் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்கும் விரைந்து கூடுதல் ஆதரவு வழங்கத் திட்டமிட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.
"உயர்மட்ட அளவில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இந்தியாவிற்கான உதவிகள் குறித்து விரைவில் அதிக தகவல்களைப் பகிர்ந்துகொள்வோம்," என்று வெள்ளை மாளிகைப் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
இந்தியாவிற்கு அதிக உதவிகளைச் செய்ய வேண்டிய நெருக்கடிக்கு அமெரிக்கா தள்ளப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.
சுகாதார உதவி, அவசரகால நிவாரணப் பொருள்கள், செயற்கை சுவாசக் கருவிகள், இந்தியச் சுகாதார அதிகாரிகளுக்குப் பயிற்சி போன்ற வழிகளில் 1.4 பில்லியன் அமெரிக்க டாலர் (S$1.9 பில்லியன்) மதிப்பிலான உதவிகளை அமெரிக்கா ஏற்கெனவே இந்தியாவிற்கு வழங்கி இருப்பதாக வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் தெரிவித்து இருக்கிறார்.
தடுப்பூசி தயாரிக்கத் தேவையான மூலப்பொருள்களை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய தடை விதித்ததால் அமெரிக்காமீது இந்தியாவில் விமர்சனங்கள் எழுந்தன.
'கொவிஷீல்ட்' தடுப்பூசியைத் தயாரித்து வரும் இந்தியாவின் சீரம் நிறுவனம், மூலப்பொருள்கள் ஏற்றுமதிக்கான தடையை நீக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடனை அண்மையில் வலியுறுத்தி இருந்தது.
பயன்படுத்தப்படாத தடுப்பூசிகளை இந்தியாவிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அமெரிக்க எம்.பி. ராஜா கிருஷ்ணமூர்த்தியும் திரு பைடனுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.