இந்தியாவில் பரவிவரும் கொவிட்-19 வகை கிருமித்தொற்று உள்ள ஒருவரை மலேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டதாக அந்நாடு தெரிவித்துள்ளது. இந்தியாவிலிருந்து வரும் விமானச் சேவைகளை புதன்கிழமை (28 ஏப்ரல்) தடை செய்திருப்பதாக மலேசியாவின் சுகாதார அமைச்சர் ஆதாம் பாபா இன்று தெரிவித்துள்ளார்.
பி1617 என்ற அந்த வகை கொரோனா கிருமி தொற்றியுள்ள இந்திய நாட்டவர், கோலாலம்பூர் விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக அமைச்சர் கூறினார். இந்த புதிய வகை கொவிட்-19 கிருமி, மேலும் விரைவாகப் பரவக் கூடியதாக இருக்கக்கூடும் என்றும் தடுப்பூசிகளை முறியடிக்கும் சக்தியைக் கொண்டிருக்கக்கூடும் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
“பொதுமக்களை அமைதியுடன் இருக்கும்படி நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். கிருமித்தொற்றுத் தொடரை முறியடிப்பதற்காகவும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் அனைத்து பொதுச் சுகாதார முயற்சிகள் தொடரும்,” என்று டாக்டர் ஆதாம் தெரிவித்தார்.
இந்நிலையில் மலேசியாவில் கொவிட்-19 சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வர அந்நாட்டின் அரசாங்கம், சிலாங்கூர், கோலாலம்பூர், பினாங்கு, ஜோகூர், சரவாக் ஆகிய மாநிலங்களில் இரண்டு வார நடமாட்டக் கட்டுப்பாட்டை அறிவித்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.